ETV Bharat / state

நகர்மன்ற கூட்டத்தை புறக்கணித்த திமுக உறுப்பினர்கள் - ஆம்பூரில் நடந்தது என்ன?

author img

By

Published : Dec 1, 2022, 11:14 AM IST

நகர்மன்ற கூட்டத்தை புறக்கணித்த திமுக உறுப்பினர்கள் - ஆம்பூரில் நடந்தது என்ன?
நகர்மன்ற கூட்டத்தை புறக்கணித்த திமுக உறுப்பினர்கள் - ஆம்பூரில் நடந்தது என்ன?

ஆம்பூர் நகராட்சியில் திமுக நகர்மன்ற தலைவரை எதிர்த்து, திமுக உறுப்பினர்களே கூட்டத்தை புறக்கணித்தனர்.

திருப்பத்தூர்: ஆம்பூர் நகராட்சி அலுவலகத்தில் நேற்று (நவ 30) காலை 10.30 மணியளவில் சாதாரண நகர்மன்ற கூட்டம் நடைபெற இருப்பதாக நகராட்சி சார்பில் அறிவிப்பு வெளியாகியது. இந்த நகர்மன்ற கூட்டத்திற்கு ஆம்பூர் நகராட்சிக்குட்பட்ட 36 வார்டு உறுப்பினர்கள் உள்ள நிலையில், ஆம்பூர் நகர்மன்ற தலைவராக திமுகவைச் சேர்ந்த ஏஜாஸ் அகமது என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஏற்கனவே கடந்த சில தினங்களுக்கு முன்பு நகர்மன்ற தலைவர் தங்களது வார்டுகளுக்கு அடிப்படை வசதிகளை செய்து தரவில்லையென கூறி திமுக, அதிமுக, பாஜக, மனிதநேய மக்கள் கட்சியைச் சேர்ந்த ஒருவரும், சுயேட்சை மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் என 21 வார்டு நகர்மன்ற உறுப்பினர்கள், தங்களது வார்டுகளில் தங்களது பணத்திலேயே அடிப்படை வசதிகளை செய்வதாக முடிவெடுத்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இந்த நிலையில் அறிவிக்கப்பட்ட நகர்மன்ற கூட்டத்தில் ஆம்பூர் நகராட்சிக்குட்பட்ட 20 வார்டு உறுப்பினர்கள் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்றனர். எனவே காலை 10.30 மணிக்கு நடைபெறவிருந்த நகர்மன்ற கூட்டம், மீதமுள்ள 16 நகர்மன்ற உறுப்பினர்கள் பங்கேற்காத நிலையில், காலை 10.30 முதல் மாலை 6.45 மணிவரை நகர்மன்ற உறுப்பினர்கள் நகராட்சி அலுவலகத்திலேயே காத்திருந்தனர்.

ஆம்பூர் நகராட்சியில் திமுக நகர்மன்ற தலைவரை எதிர்த்து, திமுக உறுப்பினர்களே நகர்மன்ற கூட்டத்தை புறக்கணித்தது பெரும் சர்ச்சை

பின்னர் நகர்மன்ற கூட்டம் நடைபெறுவதற்கான அரசாணை குறித்து அலுவலர்களிடம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து ஆம்பூர் நகராட்சி ஆணையாளர் ஷகிலா மற்றும் நகர்மன்ற தலைவர் ஏஜாஸ் அகமது ஆகியோரின் தலைமையில், இரவு 7 மணிக்கு நகர்மன்ற கூட்டம் நடைபெற்றது.

இதுகுறித்து நகராட்சி ஆணையளர் ஷகிலா கூறுகையில், “நகர்மன்ற கூட்டத்தில் எத்தனை பேர் பங்கேற்றால் நகர்மன்ற கூட்டம் நடத்தலாம் என்ற அரசாணை எங்களுக்கு இதுவரையில் தெரியவில்லை. இதுகுறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அலுவலர்களிடம் ஆலோசனை கேட்டறிந்தோம்.

அப்போது 13 நகர்மன்ற உறுப்பினர்கள் இருந்தால் நகர்மன்ற கூட்டம் நடத்தலாம் எனவும், 19 நகர்மன்ற உறுப்பினர்கள் இருந்தால் தீர்மானங்களை நிறைவேற்றலாம் எனவும் தெரிய வந்தது. எனவே 20 நகர்மன்ற உறுப்பினர்களுடன் நகர்மன்ற கூட்டம் நடத்தப்பட்டது” என தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து நடைபெற்ற நகர்மன்ற கூட்டத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், சுயேட்சை என 20 நகர்மன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற நிலையில், 100 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக நகர்மன்ற தலைவர் ஏஜாஸ் அகமது அறிவித்தார்.

இதையும் படிங்க: கோடிக் கணக்கில் நிலுவை.. வரி வசூலுக்கு தனியாரை நாடும் சென்னை மாநகராட்சி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.