திருப்பத்தூர்: வாணியம்பாடி நியூடவுன் பகுதியைச் சேர்ந்தவர், ஸ்ரீராம் குமார். இவர் தனது தாய் இந்திராணி என்பவரை கடந்த டிசம்பர் மாதம் வாணியம்பாடியில் உள்ள பி.ஜே. நேரு சாலையில் அமைந்துள்ள தனியார் பல் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
அங்கு இந்திராணிக்கு பல் மருத்துவர் அறிவரசன் என்பவர் பல் பிடுங்கியதாக கூறப்படுகிறது. பல் பிடுங்கியதன் பின்னர் இந்திராணிக்குத் தொடர்ந்து உடல் நலக்குறைவு ஏற்பட்டு வந்ததாக கூறப்படும் நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் இந்திராணி உயிரிழந்தார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் ஸ்ரீராம் குமார் தனது தாயிற்கு பல் சிகிச்சை அளித்த பல் மருத்துவர் அறிவரசனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தனது தாய் பல் மருத்துவரின் தவறான சிகிச்சையால் உயிரிழந்ததாக கூறி பல் மருத்துவர் அறிவரசன் மீது வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் காவல் துறையினர் இதனை மருத்துவத்துறை விசாரிக்க பரிந்துரைத்தனர். இதனைத் தொடர்ந்து மருத்துவத்துறையினர் வருகின்ற மே 4ஆம் தேதி பல் மருத்துவமனையின் மருத்துவரிடம் விசாரணை மேற்கொள்ள உள்ளனர். இந்நிலையில் பல் மருத்துவமனையின் முன் கருப்பு மையை ஊற்றியும், மருத்துவமனையின் கதவில் 'இந்த டாக்டரால் இழந்த உயிர்கள்' என 9 பேரின் பெயர்களை எழுதி, அவர்கள் எப்படி இறந்தார்கள் என எழுதி போஸ்டர் ஒன்று ஒட்டப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து போஸ்டர் ஒட்டப்பட்ட விவகாரம் குறித்து தகவலறிந்த சம்பவ இடத்திற்குச் சென்ற வாணியம்பாடி நகர காவல் துறையினர் போஸ்டர் ஒட்டியவர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பல் மருத்துவமனை கதவின் முன் ‘இந்த டாக்டரால் இழந்த உயிர்கள்’ என இறந்தவர்களின் பெயருடன் ஒட்டப்பட்ட போஸ்டர் வாணியம்பாடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பழனியில் பயணியின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பியோட முயன்ற இருவருக்கு பொதுமக்கள் தர்ம அடி