ETV Bharat / state

ஆம்பூரில் ஆன்லைன் செயலி மூலம் பண மோசடி.. பணத்தை இழந்த பொதுமக்கள் போலீசில் புகார்..

author img

By

Published : Aug 7, 2023, 3:05 PM IST

ஆம்பூரில் ஆன்லைன் செயலி மூலம் பண மோசடி
ஆம்பூரில் ஆன்லைன் செயலி மூலம் பண மோசடி

ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஆன்லைன் செயலியான cross world மூலம் பணத்தை இழந்த பொதுமக்கள் பணத்தை மீட்டுத் தரக்கோரி காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.

ஆம்பூரில் ஆன்லைன் செயலி மூலம் பண மோசடி

திருப்பத்தூர்: ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் மக்களிடையே கடந்த சில நாட்களாக செல்போன் ஆன்லைன் செயலி மூலம் (cross world) பணம் முதலீடு செய்தால் அதிக வட்டி பணம் கிடைக்கும் என்னும் விளம்பரம் காட்டுத்தீ போல் பரவியது. விளம்பரத்தில் அந்த செயலியில் 600 ரூபாய் முதலீடு செய்தால் முதல் நாள் 24 ரூபாய் வட்டியும், அடுத்த 10 நாட்களுக்கு 240 ரூபாய், 30 நாட்களுக்கு 740 ரூபாய் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அதிகபட்சமாக 36 லட்சம் முதலீடு செய்தால் ஒரு மாதத்திற்கு 2.5 லட்சம் ரூபாயும், ஒரு வருடத்திற்கு ரூ. 9.12 கோடி கிடைக்கும் எனவும் அப்பணமானது அவர்கள் பதிவிறக்கம் செய்துள்ள ஆன்லைன் செயலி கணக்கில் வரும் என்றும் முதலீடு செய்தோர் அந்த பணத்தை நேரடியாக அவர்களது வங்கி கணக்கின் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என்னும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை நம்பி ஆம்பூர் சுற்றுவட்டார பகுதி மக்கள் மற்றும் காலணி தொழிற்சாலையில் பணிபுரியும் பணியாளர்கள் என சுமார் 5,000க்கும் மேற்பட்டோர் ஆன்லைன் செயலியில் பல்வேறு இடங்களில் வட்டிக்கு பணத்தை பெற்று முதலீடு செய்துள்ளனர்.

இதனை தொடர்ந்து கடந்த சில தினங்களாக ஆன்லைன் செயலி சரி வர இயங்காததால், பணத்தை முதலீடு செய்த நபர்கள் தாங்கள் ஏமாந்ததை அறிந்து ஆன்லைன் செயலி மூலம் முதலீடு செய்த பணத்தை மீட்டுத் தரக்கோரி ஆம்பூர் நகர காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரை பெற்றுக்கொண்ட ஆம்பூர் நகர காவல் ஆய்வாளர் இதுகுறித்து சைபர் கிரைம் காவல்துறையினரிடம் புகார் அளிக்கும் படியும், ஆன்லைன் செயலிகளில் பணத்தை கட்டி ஏமாற வேண்டாம் எனவும் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினார். மேலும் ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் சுமார் 5,000க்கும் மேற்பட்டோர் ஏறத்தாழ கோடிக்கணக்கில் இந்த ( cross world) ஆன்லைன் செயலியில் முதலீடு செய்துள்ளதாக காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பின்னர் இதுகுறித்து ஆன்லைன் செயலியில் முதலீடு செய்து பணத்தை இழந்த நாகராஜ் என்பவர் கூறுகையில், சோலூர் பகுதியில் உள்ள தனியார் காலணி தொழிற்சாலையில் பணியாற்றி வரும் இவர் தன்னுடன் பணிபுரியும் நண்பர்கள் ஆன்லைன் செயலியில் (cross world) 9,500 ரூபாய் முதலீடு செய்தால் தினமும் 450 ரூபாய் கிடைக்கும் எனக் கூறியதை நம்பி பணத்தை ஆன்லைன் செயலியில் முதலீடு செய்துள்ளார்.

கடந்த ஜூலை 21 முதல் ஆன்லைன் செயலியில் இருந்து பணத்தை பெற்று வந்த இவர், அந்த செயலி மீது நம்பிக்கை வைத்து மேலும் 28 ஆயிரம் ரூபாய் பணத்தை ஆன்லைன் செயலியில் முதலீடு செய்ததாகவும், ஆனால் தற்போது கடந்த ஜூலை 29ம் தேதி முதல் (cross world) ஆன்லைன் செயலி இயங்கவில்லையெனவும் கூறினார்.

மேலும் ஆம்பூர் பகுதியில் மட்டும் இந்த ஆன்லைன் செயலியை சுமார் 5,000 பேர் உபயோகப்படுத்துவதாகவும், இதுவரையில் 50 கோடி முதலீடு செய்து அனைத்தையும் இழந்துள்ளதாகவும், இதுகுறித்து தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: குடிபோதை தகராறு; இளைஞர் தலையில் ஆட்டுக்கல்லை போட்டு கொலை செய்த இருவர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.