ETV Bharat / state

விளைநிலங்களை NLC-க்கு தாரை வார்ப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது - அன்புமணி

author img

By

Published : Mar 28, 2023, 4:06 PM IST

Anbumani Ramadoss said never be acceptable to give agricultural land to NLC
விலை நிலங்களை என்எல்சி நிறுவனத்திற்கு தாரை வார்ப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்

திருப்பத்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அன்புமணி ராமதாஸ் விளை நிலங்களை என்எல்சி நிறுவனத்திற்கு தாரை வார்ப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது என்றும், தமிழக அரசு டாஸ்மாக்கிற்கு டார்கெட் வைத்திருப்பது வெட்கக்கேடானது என்றும் தெரிவித்துள்ளார்.

விளைநிலங்களை NLC-க்கு தாரை வார்ப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது - அன்புமணி

திருப்பத்தூர்: ஜோலார்பேட்டை பகுதியைச் சேர்ந்த பாமக நிர்வாகி இல்ல விழாவில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அவர், " திருப்பத்தூர் மாவட்டத்தைப் பிரிக்கக்கோரி பல ஆண்டுகளாக தொடர் போராட்டம் செய்து அதில் வெற்றியும் கண்டோம். ஆனால், இதுவரை திருப்பத்தூர் மாவட்டத்திற்கு எந்த ஒரு தொழிற்சாலையும் வரவில்லை. அதேபோல, பாலாறு பிரச்னையும் இதுவரை சரி செய்யப்படவில்லை.

வெலக்கல்நத்தம் பகுதியில் உள்ள செட்டேரி அணைக்கு நீர்வரத்து வருவதற்கு எந்தப் பணியும் இதுவரை செய்யவில்லை. திருப்பத்தூர் மாவட்டத்தைப் பிரித்த பிறகு, அரசு மருத்துவக் கல்லூரி கொண்டு வர வேண்டும். ஆனால், இதுவரை தமிழக அரசு கொண்டுவரவில்லை. அதற்கான முயற்சியும் எடுக்கவில்லை.

ஆன்லைன் சூதாட்டத்தில் இதுவரை 48 பேர் பலியாகி உள்ளனர். சட்டம் இயற்ற ஆளுநருக்கு கடிதம் அனுப்பியும் அவர் நிராகரித்ததால் 19 பேர் மரணமடைந்தனர். அந்த மரணத்திற்கு ஆளுநர் தான் பொறுப்பேற்க வேண்டும். ஆன்லைன் சூதாட்டம் தடை சட்டம் உடனடியாக அமல்படுத்த வேண்டும். தமிழக இளைஞர்கள் மும்முனை தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளனர். மது, போதைப்பொருள் மற்றும் ஆன்லைன் சூதாட்டம். இதைத் தடுக்க தமிழக அரசு தவறி உள்ளது.

பாமக சார்பில் முதலமைச்சருக்குப் பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டன. அதில் முதலாவது போதை பொருளுக்கென தனி பிரிவு ஏற்படுத்தி அதற்கு டிஐஜியினை நியமிக்க வேண்டும். போதை பொருட்களைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

அதேபோல என்எல்சி நிறுவனத்திற்கு கடலூர் பகுதிகளில் 26 கிராமங்களில் சுமார் 12,125 ஏக்கர் நிலங்களை சுரங்கத்திற்கு தாரை வார்க்க பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்தச் சுரங்கம் 2026ஆம் ஆண்டு செயல்படத் தொடங்கும் என்றும் என்எல்சி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

விளைநிலங்களை என்எல்சி நிறுவனத்திற்கு தாரை வார்ப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது. பொது மக்களிடம் பாமக அச்சத்தையும் பயத்தையும் ஏற்படுத்தி வருவதாக வேளாண் துறை அமைச்சர் பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார். அதை கண்டிக்கிறோம். இந்த செய்தியாளர் சந்திப்பில் ஆதாரத்துடன் அமைச்சர் பதிலுக்கு நாங்கள் பதிலடி கொடுத்துள்ளோம்.

என்எல்சி நிறுவனத்தினால் வேலைவாய்ப்பு ஏற்படும் என அமைச்சர் தெரிவித்தது நிரந்தர வேலை வாய்ப்பு அல்ல. தினக்கூலி தான். ஆகவே, என்எல்சி நிறுவனத்திற்கு நிலங்களை வழங்கக்கூடாது. அப்படி வழங்கும்பட்சத்தில் பாட்டாளி மக்கள் கட்சி மிகப்பெரிய போராட்டத்தை நடத்தும் எனத் தெரிவித்துக்கொள்கிறோம்.

2026 சட்டமன்றத் தேர்தலில் பாமக கூட்டணி ஆட்சி அமைக்கும். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் வியூகம் அமைத்து அதற்கான வேலைகளைத் தொடர்ந்து செய்யும். தமிழ்நாட்டில் மாணவர்களுக்கு டார்கெட் வைக்கலாம் அல்லது வேளாண்துறைக்கு டார்கெட் வைக்கலாம். ஆனால், டாஸ்மாக் விற்பனைக்கு டார்கெட் வைத்துள்ளது வெட்கக்கேடானது. தற்போது ஆண்டிற்கு 45 ஆயிரம் கோடி ரூபாய் மது விற்பனை நடைபெறுகிறது என்றும்; அது அடுத்த ஆண்டு 50,000 கோடி வரை விற்பனை நடக்க வேண்டும் எனவும் டார்கெட் வைத்திருப்பது வெட்கக்கேடானது. மானக்கேடானது.

அதேபோல, தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளை குறைக்க வேண்டும் அல்லது குறைக்க முயற்சி எடுக்க வேண்டும். தமிழ்நாட்டின் வருவாயில் 30 சதவீத வருவாய் டாஸ்மாக் கடைகளால் தான் வருகிறது” என்று தெரிவித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அன்புமணி ராமதாஸ் உடன் கட்சியின் மாநில, மாவட்ட, நகர நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க: அதிமுக பொதுச்செயலாளராக இருந்தவர்கள் யார் யார்? எடப்பாடி பழனிசாமிக்கு எத்தனையாவது இடம்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.