ETV Bharat / state

விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி.. வடமாநில இளைஞர் கைது!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 22, 2023, 2:51 PM IST

தூத்துக்குடி விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக மோசடி
வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி

விமான நிலையத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த இளைஞரை சைபர் குற்றப் பிரிவு காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி: விமான நிலையத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி சுமார் 17 லட்சம் ரூபாய் மோசடி செய்த இளைஞரை சைபர் குற்றப் பிரிவு காவல் துறையினர் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை இந்திரா நகரைச் சேர்ந்தவர் பரமசிவம். இவரின் மனைவி ராணி என்பவரின் செல்போன் எண்ணுக்கு திருச்சி விமான நிலையத்தில் வேலைவாய்ப்பு இருப்பதாக குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அதனைப் பார்த்த ராணி தனது மகனின் வேலைக்காக அதில் உள்ள எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

அதனைத்தொடர்ந்து, ராணியிடம் பேசிய நபர் பல்வேறு காரணங்களை கூறி அவரிடம் இருந்து 16 லட்சத்து 61ஆயிரத்து 38 ரூபாய் பணத்தை பெற்றுள்ளனர். பின்னர், தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்த ராணி, இது குறித்து தேசிய சைபர் காவல் துறையினரிடம் NCRPல் (National Cyber crime Reporting Portal) புகார் பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில், ராணி அளித்த புகாரின் அடிப்படையில், சைபர் குற்றப் பிரிவு காவல் துறை கூடுதல் இயக்குநர் சஞ்சய்குமார், சைபர் குற்றப் பிரிவு காவல் கண்காணிப்பாளர் தேவராணி மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஆகியோரின் உத்தரவின்படி, தூத்துக்குடி சைபர் குற்றப் பிரிவு காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) கார்த்திகேயன் மேற்பார்வையில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், சைபர் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் சிவசங்கரன் தலைமையிலான சைபர் குற்றப் பிரிவு தனிப்படை காவல் துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ராணியிடம் பணம் மோசடி செய்தவர் டெல்லி, ஜமீயாநகர் பகுதியைச் சேர்ந்த மொஹத் காலிக்கான் மகன் மொஹத் அபுஷார்கான் (22) என்பது தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து, டெல்லி சென்ற தனிப்படை காவல் துறையினர், மொஹத் அபுஷார்கானை கடந்த செவ்வாய் (செப்.19) அன்று டெல்லி ஷாஹீன்பாக் காவல் நிலையம் முன்பு கைது செய்து, டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, டிரான்சிட் வாரண்ட் பெற்ற நிலையில் அவரை நேற்று (செப்.21) தூத்துக்குடி நான்காவது குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து குற்றவாளியை பேரூரணி சிறையில் அடைத்தனர்.

மேலும், தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில், மொஹத் அபுஷார்கான், பொதுமக்களிடம் மோசடியாக பணத்தை பெற்று, வேறு சிலரின் வங்கி கணக்குகளுக்கு பணப்பரிமாற்றம் செய்து கமிஷன் தொகை பெற்றுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, அவரது சகோதரர் வங்கி கணக்குகளிலும் மோசடி செய்த பணத்தை பெற்று பணப்பரிமாற்றம் செய்து கமிஷன் தொகை பெற்றுள்ளார் என்பதும் தெரியவந்தது.

இந்த மோசடியில் பல்வேறு நபர்கள் ஈடுபட்டிருப்பதால், அவர்களை கைது செய்யும் பொருட்டு சைபர் குற்றப் பிரிவு காவல் துறையினர், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: சென்னை - நெல்லை வந்தே பாரத் சோதனை ஓட்டம் - பொதுமக்கள் உற்சாக வரவேற்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.