ETV Bharat / state

தூத்துக்குடியில் மழை பாதிப்பு: மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய நிர்மலா சீதாராமன்..!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 26, 2023, 6:18 PM IST

ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட நிர்மலா சீதாராமன்
ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட நிர்மலா சீதாராமன்

Central Minister Nirmala Sitharaman inspection at Thoothukudi: தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிப்படைந்த பகுதிகளில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (டிச.26) ஆய்வு செய்தார்.

தூத்துக்குடியில் மழைப்பாதிப்புகள் குறித்து ஆய்வு: ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்திய நிர்மலா சீதாராமன்..!

தூத்துக்குடி: வளிமண்டல சுழற்சி காரணமாகக் கடந்த டிச.17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையினால், தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் முழுவதும் வெள்ளத்தால் ஸ்தம்பித்துப் போனது. குறிப்பாகத் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி கடும் சேதங்களை எதிர்கொண்டது.

திருநெல்வேலி அதன் இயல்பு நிலைக்குத் திரும்பிய நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் இந்நாள் வரையிலும் ஒரு சில பகுதிகளின் மழை வெள்ளத்தின் தாக்கம் சற்று அதிகரித்தே உள்ளது. தொடர்ந்து, நிவாரணம் மற்றும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வந்த தமிழ்நாடு அரசு, நிவாரணத் தொகையை வழங்குவதில் மத்திய அரசு விரோதப்போக்கு கொண்டுள்ளதாகக் குற்றம் சாட்டி வந்தது.

இப்படி தென் தமிழ்நாட்டுக்கான வெள்ள நிவாரணம் குறித்து மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் கிடுக்குப்புடி சண்டை நிலவி வரும் நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (டிச.26) பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தூத்துக்குடியில் ஏற்பட்டுள்ள வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிட இன்று (டிச.26) தூத்துக்குடிக்கு வருகை தந்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக அரசின் அனைத்து துறை செயலாளர்கள், துறை இயக்குநர்கள் மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் வெள்ளச் சேதம் குறித்தும் மேற்கொள்ளப்பட்ட நிவாரணப் பணிகள் குறித்தும் விளக்கம் கேட்டு ஆலோசனை நடத்தினார்.

அதன் பின்னர், குறிஞ்சி நகர்ப் பகுதியில் மழை வெள்ள நீர் தேங்கியுள்ள பகுதிகளைப் பார்வையிட்டு மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் சார்பில் வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் வீடியோ மூலம் வெள்ளச் சேதங்களை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, மத்திய இணை அமைச்சர் L.முருகன், மாநில நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உட்பட, சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், அனைத்து துறை இயக்குநர்கள் மற்றும் செயலாளர்கள் உடன் இருந்தனர். மேலும், இந்த குறிஞ்சி நகர்ப் பகுதியில் தான் தூத்துக்குடி எம்.பி கனிமொழி-யின் வீடு இருப்பதும், தூத்துக்குடி மாநகரில் அதிகமாகப் பாதிக்கப்பட்ட இடமாகவும் குறிஞ்சி நகர் கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தூத்துக்குடி வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.