ETV Bharat / state

குலசை தசரா ஆட்டத்தை பார்க்கச் சென்ற இரு சிறுவர்கள் கார் மோதி உயிரிழப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 24, 2023, 8:03 AM IST

Dussehra festival
தசரா திருவிழா

Dussehra festival: தசரா ஆட்டத்தைப் பார்க்க இருசக்கர வாகனத்தில் சென்ற இரு சிறுவர்கள் கார் மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தை அடுத்த பெரியதாழை பகுதியைச் சேர்ந்த வெங்கட் ராகவன் (16), 10ஆம் வகுப்பு முடித்துவிட்டு சென்னையில் வேலை செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையில், தசரா திருவிழாவையொட்டி சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

இந்த நிலையில், தசரா ஆட்டத்தைப் பார்ப்பதற்காக வெங்கட் ராகவனும் அவரது உறவினரான சாத்தான்குளத்தைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு படித்து வரும் ஹரிஹரன் (16) ஆகிய இருவரும் இணைந்து, இருசக்கர வாகனத்தில் காயல்பட்டினம் ஓடக்கரையில் நடக்கும் தசரா குழு ஆட்டத்தைப் பார்க்கச் சென்று உள்ளனர்.

தசரா ஆட்டத்தைப் பார்த்து விட்டு வீடு திரும்பும்போது, ஓடக்கரை அருகே சாலையில் முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தை முந்திச் செல்ல முயன்றதில், இருசக்கர வாகனம் மீது மோதியதால் நிலை தடுமாறி எதிரே வந்த கார் மீது இருவர் சென்ற இருசக்கர வாகனம் மோதி உள்ளது. இந்த விபத்தில் வெங்கட்ராகவன், ஹரிஹரன் ஆகிய இருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

உடனடியாக அருகில் இருந்தவர்கள், காயமடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக திருச்செந்தூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உள்ளனர். மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள், அவர்கள் இருவரும் இறந்து விட்டதாக கூறி உள்ளனர்.

இதனையடுத்து இருவரது உடல்களும் பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து ஆறுமுகநேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக, குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோயிலில் கடந்த அக்டோபர் 19ஆம் தேதி கொடியேற்றப்பட்டு, தசரா திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவின்போது பக்தர்கள் மாலை அணிவித்து, காப்பு கட்டி பல வேடங்கள் அணிந்து தனித்தனியாக அல்லது குழுக்களாக வந்து, தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொள்வர். தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் நிகழ்ச்சி, இன்று (அக்.24) திருக்கோயில் கடற்கரையில் வைத்து நடைபெற உள்ளது.

இதையும் படிங்க:செங்கம் அருகே அரசு பேருந்து - சொகுசு கார் மோதி கோர விபத்து.. 6 பேர் உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.