ETV Bharat / state

வெள்ளரிக்காய், பீர்க்கங்காய் விளைச்சல் அமோகம் - மகிழ்ச்சியில் தூத்துக்குடி விவசாயிகள்!

author img

By

Published : Dec 16, 2022, 5:27 PM IST

Etv Bharat
Etv Bharat

தூத்துக்குடியில் சாகுபடி செய்யப்பட்ட வெள்ளரிக்காய், பீர்க்கங்காய் உள்ளிட்டவை அமோக விளைச்சலை தந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

வெள்ளரிக்காய், பீர்க்கங்காய் விளைச்சல் அமோகம்

தூத்துக்குடி: மாப்பிளையூரணி கிராமத்தில் விவசாயிகள் ஆண்டுதோறும், வடகிழக்கு பருவமழை காலத்தில் மானாவாரியாக வெள்ளரி, பீர்க்கங்காய் ஆகியவற்றை பயிரிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில், இந்த கிராமத்தை சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பல ஏக்கர் பரப்பளவில் ஆண்டுதோறும் வெள்ளரி மற்றும் பீர்க்கங்காய் பயிரிடுகின்றனர்.

புரட்டாசி (செப்டம்பர் மாத இறுதி) மாதத்தில் விதைக்கப்பட்டு, கார்த்திகை மாதத்தில் (நவம்பர் இறுதியில்) அறுவடைக்கு வருகின்றன. இந்த ஆண்டும் வடகிழக்கு பருவமழையை நம்பி புரட்டாசி மாதம் வெள்ளரி மற்றும் பீர்க்கங்காய் விதைகளை விவசாயிகள் விதைத்துள்ளனர்.

இதுகுறித்து மாப்பிளையூரணியைச் சேர்ந்த விவசாயி வெள்ளைசாமி என்பவர் கூறுகையில், "எங்கள் கிராமத்தில் தலைமுறை தலைமுறையாக விவசாயம் செய்து வருகிறோம். விவசாய நிலத்தில், பயிர் வகைகள், அந்தந்த சீசனில் பயிரிட்டு வருகிறோம். அதன்படி, இந்த ஆண்டு புரட்டாசி மாதம் விதைப்பை தொடங்கியதோடு, தற்போது வெள்ளரி அறுவடை தொடங்கி நடைபெற்று வருகிறது.

வெள்ளரியை பொறுத்தவரை சர்க்கரை நோயை குணப்படுத்தும் தன்மை மற்றும் நீர்ச்சத்து போன்றவை உள்ளது. வெள்ளரிக்காயானது, குறைந்தது 40 நாட்களுக்குள் அறுவடைக்கு வந்துவிடும். பீர்க்கங்காய் 50 முதல் 60 நாட்களுக்கு பிறகு தான் அறுவடைக்கு வரும். எனவே, இப்போது பீர்க்கங்காய் அறுவடையும் நல்ல முறையில் தொடங்கி இருக்கிறது. மேலும், அறுவடைக்கு ஆட்கள் தேவைப்படும். ஆனாலும், எங்கள் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களே அறுவடை செய்து வருகிறோம்.

மேலும், காய்களை தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மார்க்கெட்டுகளுக்கு அனுப்புகிறோம். ஏராளமான பெண்கள் இங்கே வந்து வெள்ளரி மற்றும் பீர்க்கங்காய்களை பெட்டிகளில் வாங்கி சென்று சாலையோரங்களில் வைத்து வியாபாரமும் செய்வார்கள். இங்குள்ள விவசாயிகளும் தங்கள் வீடுகளுக்கு முன்பு வைத்து வியாபாரம் செய்வார்கள்.

வெள்ளரி பீஞ்சுகளாகவும், முதிர்ந்த காய்களாகவும் வாங்கி செல்வார்கள். கிலோவிற்கு ரூ.30 முதல் ரூ.50 விலை கிடைக்கும். நாங்கள் ஆதிகாலம் முதல் விவசாயத்தை செய்து வருகிறோம். வடகிழக்கு பருவமழையை நம்பி தான் எங்கள் விவசாயம். மழை நன்றாக இருந்தால் விளைச்சலும் நன்றாக இருக்கும். மழை இல்லையென்றால் விளைச்சலும் இருக்காது. அவ்வப்போது, அருகிலுள்ள மாடுகள் விளைநிலத்தில் புகுந்து நாசம் செய்து விடுகின்றன. இதனால், கடும் பாதிப்பும் ஏற்பட்டு விடுகின்றன.

இந்த ஆண்டு ஓரளவுக்கு நல்ல மகசூல் வந்துள்ளதாகக் கூறினார். மேலும் அவர், 100 நாள் வேலை செய்யும் திட்டத்தில் வேலை செய்யும் பெண்களை விவசாயம் செய்ய அனுமதியளிக்க வேண்டும். அவர்களுக்கு விவசாயிகள் 50% மற்றும் அரசு 50% சம்பளம் அளித்தால் விவசாயம் மென்மேலும் வளர்ச்சியடையும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.

இதையும் படிங்க: வானிலை எப்படி இருக்கும்? அறிக்கையை காண்போமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.