தூத்துக்குடியில் இருந்து விளாத்திகுளம் வழியாக மதுரைக்கு ரயில் - மக்கள் ஆறுதல்

author img

By

Published : Mar 19, 2023, 7:26 PM IST

தூத்துக்குடியில் இருந்து விளாத்திகுளம் வழியாக மதுரைக்கு ரயில் - பட்ஜெட்டால் ஆறுதல்!

தூத்துக்குடியில் இருந்து விளாத்திகுளம் வழியாக மதுரைக்கு ரயில் இயக்கப்படுவதற்காக மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதால், அப்பகுதி மக்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் தென்தமிழ்நாட்டின் தொழில் நகரமாக விளங்கி வருகிறது. இங்கு துறைமுகம், விமான நிலையம், தேசிய நெடுஞ்சாலை, ரயில் போக்குவரத்து என 4 விதமான போக்குவரத்துக்கும் வாய்ப்பான மாவட்டமாக தூத்துக்குடி இருக்கிறது. இங்கு கட்டமைப்பு வசதிகளை மேலும் அதிகரிக்கும் வகையில் விமான நிலைய விரிவாக்கம், துறைமுக விரிவாக்கம், தேசிய நெடுஞ்சாலைகள் அமைத்தல் மற்றும் கிழக்கு கடற்கரைச் சாலை விரிவாக்கம் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன.

தூத்துக்குடியில் இருந்து விளாத்திகுளம் வழியாக மதுரைக்கு ரயில் இயக்கப்படுவதற்கான வேலைகள்
தூத்துக்குடியில் இருந்து விளாத்திகுளம் வழியாக மதுரைக்கு ரயில் இயக்கப்படுவதற்கான வேலைகள்

பொதுமக்களின் பாதுகாப்பான பயணத்துக்கும், வெளி மாவட்டத்தில் உள்ள நிறுவனங்கள் துறைமுகத்துக்கு சரக்குகளை கொண்டு வரவும் ரயில் சேவையை அதிகம் விரும்புகின்றனர். ஆனால், தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு ஒரு பயணிகள் ரயிலும், மைசூருக்கு ஒரு பயணிகள் ரயிலும், கோவை, நெல்லைக்கும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதேபோல் வாராந்திர ரயிலாக ஒகாவுக்கும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

முன்னதாக தூத்துக்குடியில் இருந்து கோவை லிங்க் எக்ஸ்பிரஸ், குருவாயூர் லிங்க் எக்ஸ்பிரஸ் கரோனா காலத்தில் நிறுத்தப்பட்டது. இருப்பினும், இதுவரை இந்த லிங்க் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படவில்லை. இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தின் வறண்ட பகுதிகளாக விளங்கி வரும் குளத்தூர் மற்றும் விளாத்திகுளம் ஆகிய பகுதிகளில் தொழிற்சாலைகள் அமைக்க ஏதுவாக ரயில் போக்குவரத்தை தொடங்க அரசு நடவடிக்கை மேற்கொண்டது.

அதனைத் தொடர்ந்து கடந்த 1999 - 2000ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட ரயில்வே தொடர்பான பட்ஜெட்டில், மதுரையில் இருந்து தூத்துக்குடிக்கு புதிய வழித்தடத்தில் ரயில் பாதை அமைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டம் தொடர்பாக ஆய்வுப் பணிகள் முடிக்கப்பட்டு, கடந்த 2008 ஜூனில் ரயில்வே போர்டுக்கு ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

தற்போது தூத்துக்குடியில் இருந்து மதுரை செல்லும் ரயில்கள் மணியாச்சி, கோவில்பட்டி வழியாக 156 கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்து செல்கின்றன. புதிதாக அமைக்கப்படும் ரயில் பாதை தூத்துக்குடி மாவட்டத்தின் வறண்ட பகுதியை வளப்படுத்தும் வகையில் அமைய உள்ளது. இந்த ரயில் பாதையானது தூத்துக்குடி, மீளவிட்டான், மேலமருதூர், குளத்தூர், விளாத்திகுளம், நாகலாபுரம், புதூர், பந்தல்குடி, அருப்புக்கோட்டை, கல்குறிச்சி, காரியாபட்டி, ஆவியூர், பாறைப்பட்டி மற்றும் திருப்பரங்குன்றம் வழியாக மதுரைக்கு செல்கிறது.

இந்த ரயில் பாதையின் மொத்த தூரம் 143.5 கிலோ மீட்டர் ஆகும். இதன் மூலம் சுமார் ஒரு மணி 10 நிமிடங்கள் வரை மதுரை செல்வதற்கான பயண நேரம் குறைவதற்கான வாய்ப்பும் உள்ளது. மேலும் தூத்துக்குடி மாவட்டத்தின் முக்கிய பகுதிகள் அனைத்தையும் இணைத்து செல்லும் இந்த ரயில்வே பாதை, பொதுமக்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது. விளாத்திகுளம், புதூர், குளத்தூர், நாகலாபுரம் ஆகிய பகுதிகளில் ரயில் நிலையங்கள் அமைக்கப்படுவதால், இந்த பகுதிகள் வளம் பெறும் வாய்ப்பு உருவாகி உள்ளது.

முதல் கட்டமாக, தூத்துக்குடியில் இருந்து மேலமருதூர் வரை 23 கிலோ மீட்டர் தூரம் புதிய ரயில் பாதை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. இந்தப் பணிகள் முடிக்கப்பட்டு அதிவேக ரயில் ஓட்ட சோதனையும் நடத்தப்பட்டு, அவை தற்போது தயார் நிலையில் உள்ளன. இந்த ரயில் பாதையில் தற்போது எந்த வித ரயில்களும் இயக்கப்படவில்லை. ஆனாலும் வாரந்தோறும் ஒரு ரயில் மேலமருதூர் வரை இயக்கி சோதனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் மத்திய பட்ஜெட்டில், இந்தத் திட்டத்துக்கு 114 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இருப்பது மக்களிடையே சிறிது ஆறுதலை தந்துள்ளது. அதேநேரம் இந்த வழித்தடத்தில் அமைய உள்ள பாலங்களுக்கு ஏற்கனவே டெண்டர் விடப்பட்டுள்ளது. இதனால் புதிய ரயில் பாதை பணிகள் வேகமெடுக்குமா என்று பொதுமக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

இதையும் படிங்க: தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.