ETV Bharat / state

"மீன்வளத்துறை உதவி இயக்குநரை பணியிட மாற்றம் செய்க" - மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 6, 2023, 2:38 PM IST

Fishermen one day strike
"மீன்வளத்துறை உதவி இயக்குநர் மரியாதை குறைவாக நடைத்துகிறார்... அவரை பணியிட மாற்றம் செய்க" - மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்

Fishermen one day strike : தூத்துக்குடி மீன்வளத்துறை உதவி இயக்குநரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப் படகு மீனவர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மீனவர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டம்!

தூத்துக்குடி: திரேஸ்புரம் நாட்டு படகு மீனவர்கள், மீன்வளத்துறை உதவி இயக்குநர் மோகன் ராஜை கண்டித்து இன்று (நவ. 6) ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மீன்வளத்துறை சார்பாக, கடந்த 3ஆம் தேதி மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் மீன்வளத்துறை உதவி இயக்குநர் மோகன் ராஜ் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நாட்டு படகு மீனவர்களை அழைத்து கூட்டம் நடத்தியுள்ளார். அப்போது, மீன் வளத்துறை உதவி இயக்குநர் மோகன் ராஜ் மீனவர்களிடம் படகுகளுக்கு இன்சூரன்ஸ் செய்ய வேண்டும்.

படகுகளில் பச்சை வண்ண நிறம் அடிக்க வேண்டும். தொழில் செய்வதற்கு ஜிஎஸ்டியுடன் பில் வேண்டும். படகுகளில் நான்கு பேருக்கு மேல் கடலுக்குள் செல்லக்கூடாது. டீசல் வாங்குவதற்கு அந்தந்த நபர்கள் தான் செல்ல வேண்டும் என்று கூறியதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இது மீனவர்களுக்கு பொருந்தாத கோரிக்கை என்றும், மீனவர்களை மரியாதை குறைவாக நடத்துவதாகவும் மீன்வளத்துறை உதவி இயக்குநர் மோகன் ராஜை வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட நாட்டு படகு மீனவர்கள் இன்று ஒருநாள் (நவ. 6) தொழிலுக்கு செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து நாட்டுப் படகு மீனவர்கள் சங்கச் செயலாளர் ரீகன் கூறுகையில், "தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 5 ஆயிரம் நாட்டுப் படகுகள் உள்ளது. தூத்துக்குடி மீன்வளத்துறை உதவி இயக்குநர் மோகன்ராஜ் என்பவர் மீனவர்களை அவமதிப்புடன் நடத்தி வருகிறார். மீனவர்களுக்கு உண்டான தேவையை தேடி சென்றால் மரியாதை குறைவாக நடத்துகின்றார்.

ஒரு கோரிக்கைகாக சென்றால் வெகு நேரமாக காக்க வைத்து விட்டு, இதை செய்து தர முடியாது. இப்படி தான் செய்வேன் என்று கூறுகிறார். மேலும் கடந்த 3 ஆம் தேதி மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்ற கருத்துக்கேட்பு கூட்டத்தில் எங்கள் கோரிக்கைகளை ஏற்காமலே, வெளியே செல்லுங்கள் என்று அவமரியாதையாக கூறுகிறார்.

இதற்கு முன்பு இருந்த மீன்வளத்துறை அதிகாரிகள் எங்கள் குறைகள் துன்ப, துயரங்களை அறிந்து எங்களுக்காக செயல்பட்டனர். ஆனால் இவர் தனது ஆதிக்க சக்தியை வேண்டுமென்றே எங்களிடம் காட்டுகிறார். ஆகவே, மாவட்ட நிர்வாகம் இவரை மாற்றம் செய்ய வேண்டும். மாற்றம் செய்யவில்லை என்றால் இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டமானது, காலவரையற்ற போராட்டமாக நீடிக்கும்.

இதுபோன்று அதிகாரிகள் மாற்றம் செய்யக்கோரி இதுவரை போராடியதில்லை. இவரை மாற்றம் செய்யக்கோரி தற்போது முதல் முறையாக போராட்டம் நடத்துகிறோம். மேலும், இன்று ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்வதால் கிட்டத்தட்ட மாவட்டம் முழுவதும் கோடிக்கணக்கான அளவில் வருவாய் இழப்பு ஏற்படும். மீன் விலை அதிகரிக்கும். அதனால் சுமார் 1.30 லட்சம் குடும்பங்கள் பாதிக்கப்படுவார்கள்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: தரமில்லாத சாலை.. கைகளால் பெயர்த்தெடுத்த மக்கள்! அதிகாரிகள் 20% கமிஷன் வாங்குவதாக ஊர் மக்கள் குற்றச்சாட்டு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.