ETV Bharat / state

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி தூத்துக்குடி கலெக்டர் ஆபிஸ் முற்றுகை!

author img

By

Published : Apr 27, 2023, 5:29 PM IST

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரியும், ஆலையை திறக்கக் கோருவோர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கக்கோரியும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

people
ஸ்டெர்லைட்

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை, கடந்த 2018ஆம் ஆண்டு மக்களின் தன்னெழுச்சிப் போராட்டம் காரணமாக மூடப்பட்டது. இந்த ஆலையை மீண்டும் திறக்க வேதாந்தா குழுமம் தீவிரமாக முயற்சித்து வருகிறது. அதேபோல் ஆலையை திறக்கக்கூடாது என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என வலியுறுத்தும் மக்கள் விரோத சக்திகள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி இன்று(ஏப்.27) மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

நேதாஜி சுபாஷ் சேனை, மற்றும் புரட்சி பாரத அமைப்பினர் சார்பாக நடைபெற்ற இப்போராட்டத்தில் சுமார் 400 பெண்கள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க கோரும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவர்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றும் முழக்கங்களை எழுப்பினர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த நேதாஜி சுபாஷ் சேனையின் மாநிலத் தலைவர் மஹாராஜன், "அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா, ஜப்பான் போன்ற நாடுகளில் ஸ்டெர்லைட் மாதிரியான ஆலைகளைத் திறக்க முடியாது. ஏனென்றால், இந்த ஆலைகள் சுற்றுப்புறச் சூழலுக்கு கேடு விளைவிப்பவை. இதில், தாமிரம், கந்தக அமிலம், பாஸ்பாரிக் அமிலம் போன்றவை தயாரிக்கப்படுகின்றன.

இப்படி தயாரிக்கப்படும்போது கந்தக டையாக்சைடு வெளியேறுகிறது. இந்த துகள்கள் காற்றில் கலக்கிறது. மேலும், 3 டன் திடக்கழிவு வெளியே வருகிறது. இந்த திடக்கழிவை முறையாக அப்புறப்படுத்தவில்லை என்றால் நீர் மேலாண்மை பாதிக்கப்படும். இங்குள்ள மக்களுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்படும்.

வளர்ந்த நாடுகள் எல்லாம் நிம்மதியான காற்றை சுவாசிக்க வேண்டும், நிம்மதியான தண்ணீரை பருக வேண்டும் என்பதற்காக இது மாதிரி ஆலைகளை இந்தியாவுக்கு தள்ளி விடுகின்றனர். இது தூத்துக்குடிக்கு மிகவும் சாபக்கேடு.

இந்த ஆலை, 2011-12ல் சுமார் 19,000 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்துள்ளனர். 16 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வெளிநாட்டில் இருந்து மூலப்பொருள் வாங்கியுள்ளனர். இந்த மூலப்பொருள் வாங்கிய நாடுகளுக்கே தாமிரத்தை ஏற்றுமதி செய்கின்றனர். மூலப்பொருள்களை கொடுத்த நாடுகள், தங்களது நாட்டில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்காதது ஏன்? - காரணம், இதுபோன்ற ஆலையை அங்கு திறந்தால் அங்கு மிகப்பெரிய போராட்டம் நடந்திருக்கும். சுற்றுச்சூழல் பாதிக்கும், பல உயிர்கள் பலியாகியிருக்கும்.

இப்போது தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் வேலை வாய்ப்புகள் பறிபோய்விட்டது என வதந்தி கிளப்பி ஸ்டெர்லைட்டை திறக்க வைக்க முயற்சிக்கின்றனர். நீதிமன்றம் மூலமாகத் திறக்க முடியவில்லை என்பதால், அரசின் கதவை தட்டிக் கொண்டே இருக்கின்றனர்.

சாதி அமைப்புகளை வைத்து, ஆலையைத் திறக்க வாரந்தோறும் மனு அளித்து வருகின்றனர். ஆலை மூடப்பட்டதால் மக்களின் வாழ்வாதாரம் பாதிப்படைகிறது என்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர். இதற்காக சிறிய கட்சிகளுக்கு பண உதவியும் செய்து வருகின்றனர். இந்த சதிகளை கண்டுபிடித்து, அபாயகரமான ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும். ஆலையைத் திறக்க ஆதரவாக குரல் கொடுக்கின்ற சமூக விரோத சக்திகள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறினார்.

இந்தப் போராட்டம் காரணமாக ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதையும் படிங்க: சென்னையில் தடையை மீறி கொடிகட்டி பறக்கும் மாஞ்சா நூல் விற்பனை; 1 மாதத்தில் 3 பேர் பலத்த காயம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.