ETV Bharat / state

தூத்துக்குடி அருகே விபத்தில் உயிரிழந்த மாலுமியின் உடல் உறுப்புகள் தானம்.. முதலமைச்சர் ஸ்டாலின் நிதியுதவி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 7, 2023, 11:12 AM IST

Organ donation
விபத்தில் உயிரிழந்த கப்பல் மாலுமியின் உடல் உறுப்புகள் தானம்

Organ donation: விபத்தில் உயிரிழந்த கப்பல் மாலுமியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரது உடல் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

விபத்தில் உயிரிழந்த கப்பல் மாலுமியின் உடல் உறுப்புகள் தானம்

தூத்துக்குடி: புன்னைக்காயல் அருகே கடந்த அக்டோபர் 31ஆம் தேதி இரவு நேரத்தில், 2 இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் கப்பல் மாலுமிகளான புன்னக்காயலைச் சேர்ந்த அலெக்சாண்டர் (34), லசிங்டன்(31) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் அதே பகுதியைச் சேர்ந்த கப்பல் மாலுமி வசந்தன் பீரிஸ் (34) படுகாயத்துடன் மதுரையிலுள்ள தனியார் மருத்துவமனையிலும், மீனவரான ராஜன் (54) என்பவர் ஆத்தூர் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்தனர். அதில் வசந்தன் என்பவர் கடந்த நவம்பர் 5ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனையடுத்து அவரது கண்கள், இதயம், சிறுநீரகம், கல்லீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மதுரை தனியார் மருத்துவமனை நிர்வாகத்தினர் மற்றும் ஊழியர்கள் அவரது உடலுக்கு மரியாதை செலுத்தினர். இந்த நிலையில், நேற்று (நவ.6) மாலை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தலைமையில் அரசு மரியாதையுடன், புன்னைக்காயல் புனித சவேரியார் ஆலயத்தில் நடந்த திருப்பலிக்குப் பின்னர் வசந்தனின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதில் புன்னைக்காயல் ஊர் பொதுமக்கள், வருவாய்த் துறையினர், காவல் துறையினர் உள்பட பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில், இன்று (நவ.7) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, நிதியுதவி அளிக்க உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த வசந்தன் ப்ரீஸ் என்பவரின் உடல் உறுப்புகள் குடும்ப உறுப்பினர்களால் தானம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது தமிழ்நாடு அரசு அவரது தியாகத்தை போற்றுகிறது.

மேலும், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராஜன் என்பவருக்கு 1 லட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்" என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: அரசியல் கேள்விகளை தவிர்த்த குஷ்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.