ETV Bharat / state

தசரா திருவிழாவுக்கு தயாராகும் குலசை.. மாறுவேடத்துக்கான ஆடை அணிகலன் தயாரிக்கும் பணி தீவிரம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 12, 2023, 10:30 PM IST

Etv Bharat
Etv Bharat

Dasara in Kulasai Mutharamman temple: தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் கோயில் 'தசரா திருவிழா'-வையொட்டி, மாறுவேடமிடும் பக்தர்களுக்கு தயாராகி வரும் ஆடை அணிகலன்கள் தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்படைந்துள்ளன. இது குறித்து அலசுகிறது இந்த செய்தித் தொகுப்பு.

குலசை தசரா திருவிழா சிறப்புத் தொகுப்பு

தூத்துக்குடி: மைசூருக்கு அடுத்தபடியாக, தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் 'தசரா திருவிழா' மிகவும் பிரசித்திப் பெற்றது. இந்த ஆண்டுக்கான திருவிழா வரும் 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. அக்.24ஆம் தேதி நள்ளிரவு 'சூரசம்ஹாரம்' நடைபெற உள்ளது. இந்த தசரா திருவிழாவை முன்னிட்டு, தமிழகத்தில் பல்வேறு மாவட்டத்தில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு மாலை அணிவித்து காப்பு கட்டி 61, 41, 21, 11 ஆகிய நாட்கள் சூழ்நிலைக்கு தகுந்தது போல் விரதம் மேற்கொள்வர்.

மேலும், விரதம் இருந்து தங்கள் நினைத்த காரியம் நடக்க வேண்டி சிவன், பார்வதி, முருகன், வள்ளி, பிள்ளையார், காளி, அட்டகாளி, கருங்காலி, சுடுகாட்டு காளி உள்ளிட்ட பல்வேறு தெய்வ வேடங்களும்; குறவன், குறத்தி உள்ளிட்ட வேடங்களும் அதுமட்டுமின்றி விலங்குகள் போலவும் வேடமணிந்து ஊர் ஊராக சென்று காணிக்கை வசூல் செய்வர். இந்த நிலையில், வேடமணியும் பக்தர்களுக்கு தேவையான பொருட்கள் தயாரிக்கும் பணி மும்மரமாக நடைபெற்று வருகிறது.

திருச்செந்தூர் அருகே உள்ள சுனாமி நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் காளி வேடமிடுபவர்கள் தலையில் அணிவிக்கக்கூடிய கிரீடம், அலுமினிய தகடு மூலம் கையினால் செய்யப்பட்டு வருகிறது. இந்த கிரீடங்களுக்கு வண்ணங்கள் தீட்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

காளி வேடம் அணிபவர்களுக்கு மட்டுமின்றி, பல்வேறு தெய்வ வேடம் அணிபவர்களுக்கும் இங்கு கிரீடங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த கிரீடங்கள் 2,000 ரூபாய் முதல் 7,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. அதுமட்டுமின்றி வேடமணியும் பக்தர்களுக்கு பல வண்ண நிறங்களில் தேவைக்கு ஏற்றபடி ஆடைகள் தயாரித்து கொடுக்கப்பட்டு வருகிறது. குரங்கு, கரடி, சிங்கம், புலி, ராஜா, ராணி வேடமணியும், பக்தர்கள் தேவைக்கு ஏற்றவாறு ஆடைகள் அளவு எடுத்து தைத்துக் கொடுப்படுகிறது.

வேடம் அணிவதற்கான மாலைகள், கண்மலர், வீரப்பல், நெத்திபட்டயம், முனிவர் வேஷத்திற்கான தாடி மீசைகள், மண்டை ஓடு, எலும்புக்கூடு போன்ற பொருள்களை தயாரித்து வருகின்றனர். இந்த பொருட்களின் விலை 500 முதல் 5,000 வரைக்கும் வியாபாரம் செய்யப்படுகிறது.

25 வருடங்களாக இப்பொருட்களை செய்து வரும் உரிமையாளர் பாக்கியராஜ் கூறுகையில், குலசை தசரா திருவிழா பிரசித்தி பெற்றது. முத்தாரம்மனுக்கு நேர்த்தி கடன் இருக்கும் பக்தர்கள் பல்வேறு வேடங்கள் அணிவர். அதனை தயாரிக்கும் பணியானது, சித்திரை மாதம் முதல் தொடங்கப்பட்டு செய்து வருகிறோம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உள்ள உடைகள், கிரீடம், மண்டை ஓடு, சூலம், வால் போன்றவைகள் செய்து வருகிறோம்.

இந்த தொழிலை 20க்கும் மேற்பட்டோர் செய்து வருவதாக கூறிய அவர், வருடம் தோறும் இந்த பொருட்கள் பெருகி கொண்டே தான் இருக்குதே தவிர குறைவது இல்லை என்றார். திருவிழாவுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பக்தர்கள் மாலை அணிவித்து வேடப்பொருட்களை விறுவிறுப்பாக ஆங்காங்கே உள்ள கடைகளிலும் வாங்கி செல்கின்றனர்.

இதையும் படிங்க: ஆளுநர் மாளிகை நவராத்திரி விழா கொலுவில் பங்கேற்க பொதுமக்களுக்கு அனுமதி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.