ETV Bharat / state

கொம்புத்துறையா? கடையக்குடியா? மீனவ கிராமத்தின் பெயர் சர்ச்சை.. தூத்துக்குடி ஆட்சியரிடம் முறையிட்ட பெண்கள்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 9, 2023, 8:30 PM IST

fishing village name Controversy near Thiruchendur Women petitioned at the thoothukudi collector office
கலெக்டர் அலுவலகத்தில் முறையிட்ட மீனவ கிராம பெண்கள்

fishing village name Controversy: திருச்செந்தூர் அருகே மீனவ கிராமத்தின் பெயர் சர்ச்சையில் மீன்வளத்துறை அமைச்சர் தலையிட்டு சுமூகத் தீர்வு காண வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கலெக்டர் அலுவலகத்தில் முறையிட்ட மீனவ கிராம பெண்கள்

தூத்துக்குடி: திருச்செந்தூர் அருகே உள்ள காயல்பட்டினம் நகராட்சியில், 'கொம்புத்துறை' என்ற மீனவ கிராமம் உள்ளது. இங்கு மீனவர்கள் 200க்கும் மேற்பட்டோர் உள்ளனர். இவர்கள் கிறிஸ்தவ சமூகம் ரோமன் கத்தோலிக்கர் என்று அழைக்கப்படுகிறார்கள். முஸ்லிம் சமூக மக்கள் அதிகம் வசிக்கும் காயல்பட்டினம் நகராட்சியில் உள்ளடக்கிய கொம்புத்துறை கிராமத்தை முஸ்லிம் சமூக மக்களால் 'கடையக்குடி' என்று அழைக்கப்படுகிறது.

இதனால், ஊரின் பெயர் 'கடையக்குடியா 'கொம்புத்துறையா? என வழக்கு போடப்பட்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நிலுவையில் உள்ளது. இப்படி இருக்கும் பட்சத்தில் சமீபத்தில் மீனவ சமூகத்தினர் இருவர், அந்தோணி பிராங்கோ என்கிற முகமது பிராங்கோ (29), ஜெபாஸ்டியன் என்கிற ஈசா (32), முஸ்லிம் மதத்துக்கு மாறியுள்ளனர். இவர்களை கொம்புத்துறை மீனவ சங்கத்தினர் கொம்புத்துறை கடற்கரையில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க விடாமல் தடுப்பதாகவும் புகார் அளித்துள்ளனர்.

ஆனால் கிறிஸ்தவர்களோ இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். இதற்கு ஒரு முடிவு வேண்டும் என்று 1 மாத காலமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல மாட்டோம் என கரையில் தங்கியுள்ளனர். இது சம்பந்தமாக கொம்புத்துறை கிராம பெண்கள் 100க்கும் மேற்பட்டோர் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ்-யை சந்தித்து மனு அளித்தனர்.

இது குறித்து அப்பகுதி பெண் ஜாஸ்மின் கூறுகையில், “காயல்பட்டினம் அருகே உள்ள கொம்புத்துறை கிராமத்தில் இருந்து இருவர் முஸ்லிம் மதத்திற்கு மாறி உள்ளனர். அவர்கள் இருவருக்காக முஸ்லிம் சமுதாயத்தினர் டிராக்டர் வாங்கி கொடுத்து பிரச்னை ஏற்படுத்தி வருகின்றனர். 200 குடும்பங்கள் வாழ்ந்து வருகிறோம். ஒரு மாத காலமாக தொழிலுக்கு போகவில்லை. நாங்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளோம்.

ஆனால் முஸ்லிம் ஐக்கிய பேரவை சார்பில் மதம் மாறி போனவர்களை வைத்து பிரச்னை ஏற்படுத்தி வருகின்றனர். தனியார் பேருந்தையும் ஊருக்குள் வர விடாமல் செய்கின்றனர். ஆகவே, மாவட்ட ஆட்சியர் தலையிட்டு நல்ல ஒரு தீர்வு காண வேண்டும். இல்லை என்றால் மிக பெரிய போராட்டங்கள் நடத்தப்படும்” எனத் தெரிவித்தார்.

முன்னதாக, கொம்புத்துறை ஊர் அருகே உள்ள அமலி நகரில் துண்டில் பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மீனவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி வந்தனர். அதே போன்று இந்த கிராமத்திலும் போராட்டங்கள் நடைபெறும் முன் இந்த பகுதி சட்டமன்ற உறுப்பினரும், மீன் வளத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் தலையிட்டு சுமூக தீர்வு ஏற்படுத்தி தர வேண்டும் என்பதே பல்வேறு சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

இதையும் படிங்க: "உங்களுக்கு வந்தால் தக்காளி.. எங்களுக்கு வந்தால் ரத்தமா?" - அமைச்சர் கே.என்.நேரு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.