ETV Bharat / state

தூத்துக்குடியில் 19வது ஆண்டு சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 26, 2023, 1:07 PM IST

சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மீனவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி
சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மீனவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

Tsunami memorial day in Thoothukudi: 19வது ஆண்டு சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடியில் மீனவர்கள் கடல் தாய்க்கு மலர் தூவியும், பால் ஊற்றியும் அஞ்சலி செலுத்தினர்.

சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மீனவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

தூத்துக்குடி: கடந்த 2004ஆம் ஆண்டு டிசம்பர் 26 அன்று, சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக இந்தியா, இலங்கை, இந்தோனேஷியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் கடலோர மாவட்டங்களை சுனாமி பேரலை தாக்கியது. குறிப்பாக, தமிழ்நாட்டில் சுனாமி தாக்குதலால் சென்னை, கடலூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, கன்னியாகுமரி உள்ளிட்ட 13 கடற்கரை மாவட்டங்கள் பெரும் சேதத்தைச் சந்தித்தன.

இந்தப் பேரலையில் சிக்கி பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். பலர் மாயமாயினர். மேலும், இந்த பேரழிவு ஏற்பட்டு இன்றுடன் 19 ஆண்டுகள் ஆயினும், அதன் பாதிப்புகள் இன்றளவும் கடற்கரை கிராமங்களில் தொடர்கிறது. இந்த மீளாத் துயரின் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 26ஆம் தேதி சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டில் இன்று 19ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.

இதனை ஒட்டி, தூத்துக்குடி மாவட்டம் திரேஸ்புரம் கடற்கரையில் அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது. அதில் அப்பகுதியைச் சார்ந்த சங்குளி மீனவர் சங்கம் சார்பில், அதன் தலைவர் இசக்கிமுத்து தலைமையில் மீனவர்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

மேலும், இனிமேல் இப்படி ஒரு பேரழிவை இயற்கை தந்து விடக்கூடாது என வேண்டி, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கடல் தாய்க்கு மலர் தூவியும், பால் ஊற்றியும் அஞ்சலி செலுத்தினர். இதில் திரளான மீனவர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: தூத்துக்குடியில் அடுத்த 3-4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: மக்கள் அச்சப்பட தேவையில்லை - தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.