தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள காய்கறி சந்தையில், தானியங்கி மூலமாக பொதுமக்கள் மீது கிருமி நாசினி தெளிக்கும் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதனை தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்துவைத்து பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாநகராட்சி ஆணையாளர் ஜெயசீலன் உள்ளிட்ட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் கூடுதலாக தானியங்கி கிருமி நாசினி தெளிப்பான் சுரங்கப் பாதை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் சளி மற்றும் ரத்த மாதிரிகளை ஆய்வு செய்வதற்கான கண்டறிதல் மையம் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விரைவில் அமைக்கப்படும். காய்கறி சந்தைக்கு வரும் பொதுமக்கள் மீது கிருமி நாசினி தெளிக்கும் இந்த தானியங்கி சுரங்கப்பாதை அமைப்பானது, பொதுமக்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்" என்றார்.
இதையும் படிங்க: களப்பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு 15 மாத ஊதியம் வழங்கப்படும் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி!