ETV Bharat / state

தூத்துக்குடியில் 90 சதவீதம் பேருந்துகள் இயக்கம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 9, 2024, 11:59 AM IST

Thoothukudi bus strike: தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிற்சங்கம் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், தூத்துக்குடியில் 90 சதவீதத்திற்கும் மேலான பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்படுகிறது என போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Thoothukudi bus strike
தூத்துக்குடியில் 90 சதவீதம் பேருந்துகள் இயக்கம்

தூத்துக்குடி: போக்குவரத்து தொழிலாளர்கள் அரசுடன் நேற்று நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், திட்டமிட்டபடி இன்று (ஜன.9) வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். அதன்படி, தமிழகம் முழுவதும் பேருந்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், போக்குவரத்துக் கழக ஊழியர்களின் கோரிக்கையை, அரசு பொங்கல் பண்டிகைக்கு பிறகு நிறைவேற்றி தரும் என்ற நம்பிக்கை இருப்பதால், அனைத்து பேருந்துகளும் தூத்துக்குடி மாவட்டத்தில் இயக்கப்படுவதாக போக்குவரத்துக் கழக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும், கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை அரசு பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் ஆகிய 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜனவரி 9ஆம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்தன.

தமிழக அரசு சார்பில், போக்குவரத்து கழகங்களுடன் இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு தோல்வியுற்ற நிலையில், 3ஆம் கட்ட பேச்சுவார்த்தை, நேற்று (ஜன.8) நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையிலும் சுமூக முடிவு எட்டப்படாததால், திட்டமிட்டபடி வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என தொழிற்சங்க நிர்வாகிகள் அறிவித்தனர்.

90 சதவீதம் பேருந்துகள் இயக்கம்: தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர், தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், கோவில்பட்டி உள்ளிட்ட 7 பணிமனைகளில் இருந்து மொத்தம் 302 பேருந்துகள் இயக்கப்படுகிறது. இன்று நடைபெறும் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தில், 90 சதவிகிதம் பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்படுகிறது.

பெரும்பாலான போக்குவரத்துக் கழக ஊழியர்கள் பணிக்கு வந்துள்ளனர். இதனால், பொதுமக்கள் வழக்கம்போல் பயணம் செய்து வருகின்றனர். மேலும், இப்பகுதிகளில் ஒரு பணிமனைக்கு தற்காலிகமாக 40 ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் வீதம் தயார் நிலையில் உள்ளனர் என போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து, போக்குவரத்துக் கழக ஊழியர்களின் கோரிக்கையை, அரசு பொங்கல் பண்டிகைக்கு பிறகு நிறைவேற்றித் தரும் என்ற நம்பிக்கை இருப்பதால், அனைத்து பேருந்துகளும் தூத்துக்குடி மாவட்டத்தில் இயக்கப்படுவதாக போக்குவரத்துக் கழக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: சென்னையில் பேருந்து ஊழியா்கள் வேலைநிறுத்த போராட்டம்..பயணிகள் கடும் அவதி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.