தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் தேர்வுநிலை பேரூராட்சியில் பால்ராஜ் என்பவர் செயல் அலுவலராக பணிபுரிந்து வருகிறார். நாசரேத் பேரூராட்சியில் வீட்டு பிளான் அனுமதிகேட்டு சென்றால் அவர்களுக்கு பிளான் அப்ரூவல் தாமதமாக கிடைப்பதாகவும், நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என தொடர் குற்றச்சாட்டு எழுந்து வந்தது. இந்த நிலையில், பேரூராட்சி செயல் அலுவலர் பால்ராஜ் என்பவர் தான் வாங்கும் லஞ்ச விவரம் குறித்து தொலைப்பேசியில் பேசிய ஆடியோ ஒன்று இன்று (மார்ச்.28) வெளியாகி உள்ளது.
அதில் பேசிய நாசரேத் பேரூராட்சி அலுவலர் பால்ராஜ், தான் 'பிளான் அப்ரூவலுக்கு ரூ. 1000, காண்ட்ராக்ட் கமிஷன் 2%, குடி தண்ணீர் குழாய் அமைக்க பில் ஒன்றுக்கு 1,000 ரூபாய் லஞ்சமாக வாங்குவதாக' தொலைபேசி உரையாடலில் ஒப்புக் கொண்டுள்ளார். மேலும், 'இதுக்கு மேல எனக்கு என்ன வேணும்? இப்படி அளவுக்கு அதிகமாக கமிஷன் பெறுவதால் என்னோட 60,000 ரூபாய் சம்பளம் எனக்கு மிச்சம் தானே...!' எனத் தான் ஏதோ சாதனை புரிந்ததாக எண்ணிக்கொண்டு மார் தட்டிக் கொண்டு பெருமையுடன் பேசி உள்ளார்.
இந்த ஆடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லஞ்சம் வாங்கி வருவதாக நாசரேத் பேரூராட்சியின் செயல் அலுவலர் பால்ராஜ் பேசிய, இந்த தொலைபேசி உரையாடலில் மற்றொரு முனையில் பேசிய இமானுவேல் கூறுகையில், 'நாசரேத் பேரூராட்சியில் இதுவரை எந்தவித வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெறவில்லை எனவும், பேரூராட்சி தேர்தல் முடிந்தது முதல் தற்போது வரை அனைத்தும் மராமத்து பணிகள் மட்டுமே நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: விசாரணைக்கு ஆஜரான கைதிகளுக்கு போலீசார் மிரட்டல்? - நெல்லை பல்(பல்)வீர் சிங் விவகாரத்தில் பரபரப்பு!
குறிப்பாக, அதிலும் சிறிய பணிகளுக்கு ரூ.9 லட்சம் மற்றும் ரூ.6 லட்சம் என பெரிய தொகையாகச் செலவிட்டுள்ள நிலையில், அப்பகுதிகளில் அதற்கான பணிகள் ஒன்றும் நடைபெறவில்லை எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், இந்த ஆடியோ குறித்து விளக்கம் கேட்க நாசரேத் பேரூராட்சி செயல் அலுவலர் பால்ராஜின் அரசு தொடர்பு எண்ணை, தொடர்புகொண்ட போது அந்த தொடர்பு எண் உபயோகத்தில் இல்லை எனக் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பேரூராட்சி பகுதியில் வீட்டுமனைகள் மற்றும் வீடுகள் கட்டுவதற்கான பணிகளுக்கு ஒப்புதல் வழங்குவதற்கு பொதுமக்களிடையே லஞ்சம் பெற்று வருவது இந்த ஆடியோ பதிவு ஆதாரமாக அமைந்துள்ளது. இதன் அடிப்படையில், நாசரேத் பேரூராட்சி செயல் அலுவலர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: 'நாகம் வாந்தி எடுத்த கற்கள்' நாகர் குலத்து பிறவி என பல மோசடி.. மக்களை ஏமாற்றியது எப்படி?