ETV Bharat / state

வெள்ளத்தில் சிக்கிய அமைச்சரை மீட்கவே 3 நாட்கள் என்றால் மக்களின் நிலை என்ன? - தமிழக அரசுக்கு எதிராக அண்ணாமலை கடும் விமர்சனம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 20, 2023, 10:23 PM IST

Updated : Dec 20, 2023, 11:05 PM IST

Annamalai Has Criticized The TN govt
"வெள்ளத்தில் சிக்கிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனே, 3 நாட்கள் கழித்துத்தான் மீட்கப்பட்டிருக்கிறார்" - அண்ணாமலை

Annamalai: வெள்ளத்தில் சிக்கிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனே, மூன்று நாட்கள் கழித்துத்தான் மீட்கப்பட்டிருக்கிறார் என்றால், இந்த அரசு எவ்வளவு வேகத்தில் செயல்படுகிறது என்பதை மக்கள் தெரிந்துகொள்ளலாம் என அண்ணாமலை விமர்சித்துள்ளார்

அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடியில் பெய்த அதிகனமழை காரணமாகவும் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களைத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பார்வையிட்டு அவர்களுக்கு ஆறுதல் கூறினார். இதை அடுத்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், "தூத்துக்குடியைப் பொறுத்தவரை மழை முடிந்து மூன்று நாட்களாகியும், ஊரும் வீடுகளும் தண்ணீரில் தான் உள்ளது. மாநகரின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளநீர் அகற்றப்படாததால், நிவாரண முகாம்களில் அதிகப்படியான மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வெள்ள மீட்புப் பணிகளில் தமிழக அரசு இன்னும் வேகமாகச் செயல்பட வேண்டும். வெள்ளத்தில் சிக்கிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனே, மூன்று நாட்கள் கழித்துத்தான் மீட்கப்பட்டிருக்கிறார் என்றால், இந்த அரசு எவ்வளவு வேகத்தில் செயல்படுகிறது? இந்த ஆட்சி எவ்வளவு வேகமாகச் செயல்படுகிறது? என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

மக்களின் பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு. சென்னையில், வெள்ளம் பாதிப்பு ஏற்பட்டு இரண்டு நாட்கள் மின்சாரம் இல்லை என்றதும், மூன்றாவது நாள் மக்கள் சாலைக்கு வந்துவிட்டனர். ஆனால், தூத்துக்குடியில் கடந்த மூன்று நாட்களாக மக்கள் மின்சாரம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

திருச்செந்தூர் பகுதி இதைவிட இன்னும் மோசமாக உள்ளது. நிவாரண பணிகளைத் தாமதப்படுத்தினால் மக்களுடைய கோபத்திற்கு நாம் அனைவரும் இரையாகி விடக்கூடிய சூழ்நிலை உண்டாகும். தூத்துக்குடியைப் பொறுத்தவரை மழை வெள்ளத்தை வெளியேற்றுவதற்கான திட்டம் இல்லை.

80 மீட்டர் இருந்த பக்கிள் ஓடை அகலத்தை 20 மீட்டாராகக் குறுக்கி தற்போது கால்வாயாக உள்ளது. காலம், காலமாக எம்.பி., எம்.எல்.ஏ-வாக உள்ளவர்கள் மழை நீரை வெளியேற்றுவதற்கான வடிகால் வசதிகளை ஏற்படுத்தித் தரவில்லை.

ஆனால் வெள்ளம் வந்தால் மட்டும், இங்கு இருக்கக்கூடிய அரசியல்வாதிகள் வந்தோம், வேட்டியை மடித்துக் கட்டினோம், நிவாரண பணிகளைச் செய்தோம் என சென்றுவிடுகிறார்கள். தூத்துக்குடியை மழை வெள்ள பாதிப்பில் இருந்து மீட்பதற்கு முழுமையான திட்டம் இல்லை. தொலைநோக்கு பார்வையில்லை.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கொடுக்கப்பட்ட பணத்தை முழுமையாகத் திட்டமிட்டுச் செயல்படுத்தவில்லை. எனவே தூத்துக்குடியை மழை வெள்ளத்தில் இருந்து பாதுகாக்கத் தொலைநோக்கு திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும். இதுவரை மழைநீர் வடிகால் பணிக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

தொலைத்தொடர்பு இல்லாத கிராமங்களில் இன்னமும் மீட்புப் பணிகள் நடைபெறவில்லை. தி.மு.க அமைச்சர்கள், மக்கள் கேள்வி கேட்பார்கள் என்பதற்குப் பயந்து கார் கண்ணாடியை இறக்காமலேயே செல்கிறார்கள்" என்று தமிழக அரசை அண்ணாமலை கடுமையாக விமர்சித்தார்.

இதையும் படிங்க: தூத்துக்குடியில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை.. தென்காசி, நெல்லை மாவட்டங்களின் நிலை என்ன?

Last Updated :Dec 20, 2023, 11:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.