ETV Bharat / state

திருச்செந்தூரில் 3வது நாளாக தொடரும் மீனவர்கள் போராட்டம்!

author img

By

Published : Aug 9, 2023, 5:53 PM IST

திருச்செந்தூரில் 3வது நாளாக தொடரும் மீனவர்கள் போராட்டம்!
திருச்செந்தூரில் 3வது நாளாக தொடரும் மீனவர்கள் போராட்டம்!

திருச்செந்தூர் அமலிநகர் கடல் பகுதியில் அரசு அறிவித்தபடி தூண்டில் வளைவு பாலம் அமைக்கப்படாததை கண்டித்து மீனவர்கள் 3வது நாளாக கடற்கரையில் மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருச்செந்தூரில் 3வது நாளாக தொடரும் மீனவர்கள் போராட்டம்!

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே அமலி நகர் என்ற மீனவ கிராமம் உள்ளது. இந்த மீனவ கிராமத்தில் சட்டப்பேரவை மானியக் கூட்டத் தொடரில் 58 கோடி ரூபாய் மதிப்பில் அரசு அறிவித்த தூண்டில் வளைவு பாலப் பணிகள், ஓராண்டாகியும் தொடங்கப்படாததைக் கண்டித்து நேற்றைய முன்தினம் (ஆகஸ்ட் 7) முதல் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்ந்து, நேற்றும் (ஆகஸ்ட் 8) இந்த போராட்டம் தொடர்ந்த நிலையில், இன்றும் (ஆகஸ்ட் 9) 3ம் நாளாக மீனவர்கள் மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், மீனவர்கள் தங்கள் குடும்பத்துடன் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கடற்கரையில் மனிதச் சங்கிலி அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, அவர்கள் தமிழ்நாடு அரசை கண்டித்தும், மீன்வளத் துறையைக் கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும், தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தும், மாவட்ட நிர்வாகத்தின் அழைப்பை புறக்கணித்து மீனவர்கள் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

அதேநேரம், மாவட்ட நிர்வாகம் பலமுறை பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், இதுவரை எந்தப் பணிகளும் தொடங்கப்படவில்லை என மீனவர்கள் அதிருப்தி தெரிவித்து உள்ளனர். எனவே, இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தப் பகுதியில் தூண்டில் வளைவு பாலம் அமைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், அப்படி மறுக்கும் பட்சத்தில் தொடர் போராட்டங்கள் வெடிக்கும் என்றும் மீனவர்கள் கூறி உள்ளனர்.

இந்த அமலி நகரில் சுமார் ஆயிரம் மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு உள்ள மீனவர்கள் சுமார் 200க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் மூலம் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, இந்தப் பகுதியில் கடல் சீற்றத்தின் காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டு உள்ளதால், மீன்பிடித் தொழிலுக்குச் சென்று விட்டு திரும்பும்போது கரையில் படகுகளை நிறுத்துவதில் சிரமம் ஏற்படுவதாகவும், இதன் காரணமாக அடிக்கடி படகுகள் கவிழ்ந்து மீனவர்கள் காயம் அடைந்தும் வருகின்றனர்.

இதனால், இந்தப் பகுதியில் தூண்டில் வளைவு பாலம் அமைத்து தர வேண்டும் என மீனவர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனிடையே, வருகிற 18ஆம் தேதி ராமநாதபுரத்தில் நடைபெற உள்ள மீனவர் சங்கங்களின் மாநில மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்வார் என மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அறிக்கை வாயிலாக தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தூண்டில் பாலம் அமைப்பதில் மெத்தனம் - தூத்துக்குடி அமலிநகர் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.