ETV Bharat / state

தூத்துக்குடியில் 5 நாட்களுக்கு பிறகு ரயில் சேவை...! பயணிகள் மகிழ்ச்சி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 22, 2023, 9:58 AM IST

Thoothukudi Train Service
தூத்துக்குடியில் 5 நாட்களுக்குப் பிறகு சீரான ரயில் சேவை

Thoothukudi Train Service: தூத்துக்குடி ரயில் நிலைய தண்டவாளங்களில் தேங்கியிருந்த மழை நீர் வடிய துவங்கியதை தொடர்ந்து, கடந்த ஐந்து நாட்களுக்குப் பின்பு ரயில் சேவை சீராக இயங்கத் துவங்கி உள்ளது.

தூத்துக்குடியில் 5 நாட்களுக்குப் பிறகு சீரான ரயில் சேவை

தூத்துக்குடி: வங்கக்கடலில் ஏற்பட்ட வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழ்நாட்டில் உள்ள தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களிலும் கன முதல் அதி கனமழை பெய்தது. குறிப்பாக தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டத்தில் அதிக கனமழை பெய்து மாவட்டம் முழுவதும் வெள்ளக்காடாகா மாறியது.

இதனால் மக்கள் தங்களது உடமை வீடுகளை இழந்து தவித்து வந்தனர். மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதளவில் பாதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் மீட்கப்பட்டு, முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். கனமழை காரணமாகவும், குளம் போன்ற நீர்நிலைகள் உடைந்து வெள்ளம் சூழ்ந்ததன் காரணமாகவும் பல்வேறு போக்குவரத்து முடங்கியது.

குறிப்பாக தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் பெய்த மிக கனமழை வெள்ளத்தால், தூத்துக்குடி ரயில் நிலையம் மற்றும் ரயில்வே தண்டவாளங்களையும் மாலை நீர் சூழ்ந்தது. இதன் காரணமாக கடந்த 15ஆம் தேதி முதல் தூத்துக்குடி ரயில் நிலையத்திற்கு ரயில் சேவை நிறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் ரயில் நிலையம் மற்றும் ரயில் தண்டவாளங்களில் தேங்கியிருந்த மழை நீர் வடிய துவங்கியதை தொடர்ந்து, தூத்துக்குடி ரயில் நிலையத்திலிருந்து முதற்கட்டமாக நேற்று மாலை மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, சென்னையில் இருந்து ஐந்து நாட்களுக்குப் பின்பு முத்துநகர் எக்ஸ்பிரஸ் தூத்துக்குடிக்கு ரயில் நிலையத்திற்கு இன்று காலை வந்தடைந்தது.

முத்து நகர் விரைவு ரயிலில் வந்த பயணிகள் தாங்கள் ஐந்து நாட்களுக்குப் பிறகு சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு ரயில் மூலம் வந்தது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தனர். மேலும் தூத்துக்குடிக்கு செல்லும் ரயில்கள் வழக்கம் போல் இயங்கும் எனவும் தகவல் தெரிவிக்கப்படுள்ளது.

நேற்று (டிச. 21) சென்னையில் இருந்து புறப்பட்டு சென்ற முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று (டிச. 22) காலை தூத்துக்குடி சென்றடைந்தது. திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, திருச்செந்தூரில் இருந்து எழும்பூர் செல்லும் விரைவு ரயில் திருநெல்வேலியில் இருந்து இரவு 9.35 மணிக்கு புறப்படும் என்றும் திருச்செந்தூர் - பாலக்காடு செல்லும் ரயில் மதியம் 1.30 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து கிளம்பும் என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்து உள்ளது.

இதையும் படிங்க: எண்ணிப் பார்க்காமல் பணத்தை வாங்கியது குத்தமா?... ரூ.500 நோட்டு கட்டுக்குள் ரூ.10 வைத்து நூதன மோசடி! ரூ.21 லட்சம் மோசடி செய்து எஸ்கேப்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.