4 லாரிகளுடன் எஸ்கேப்... 150 டன் பொட்டாஷ் உரத்துக்காக நடந்த கடத்தல்... துணிவுடன் மடக்கிய தூத்துக்குடி போலீஸ்!

author img

By

Published : May 18, 2023, 10:12 AM IST

குடோனில் கடத்தி பதுக்கிய 150 டன் பொட்டாஷ் உரம் பறிமுதல்.. தூத்துக்குடியில் துணிகரம்

தூத்துக்குடி மாவட்டம், முள்ளக்காடு அருகே தனியார் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1 கோடி ரூபாய் மதிப்பிலான 150 டன் பொட்டாஷ் உரத்தை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

தூத்துக்குடி: ரஷ்யாவில் இருந்து 33 ஆயிரம் டன் பொட்டாஷ் உரம் ஏற்றி வந்த சரக்கு கப்பல், நேற்றைய முன்தினம் (மே 16) தூத்துக்குடியில் உள்ள வ.உ.சிதம்பரனார் துறைமுகத்துக்கு வந்துள்ளது. பின்னர், துறைமுகத்தில் இருந்து லாரிகள் மூலம் தூத்துக்குடியில் இருக்கும் பல்வேறு பகுதிகளில் உள்ள குடோன்களுக்கு பொட்டாஷ் உரம் பிரித்து அனுப்பும் பணி நடைபெற்று உள்ளது.

அப்போது, சுமார் 150 டன் பொட்டாஷ் உரம் ஏற்றி வந்த 4 லாரிகள், சம்பந்தப்பட்ட குடோன்களுக்குச் செல்லாமல் இருந்துள்ளது. பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், 150 டன் எடை கொண்ட பொட்டாஷ் உரம் ஏற்றி வந்த 4 லாரிகளும் மாயமாகியது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல் துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது.

பின்னர், தனிப்படை காவல் துறையினரின் விசாரணையில், உரம் கடத்தலில் ஈடுபட்ட 4 லாரிகள் தூத்துக்குடி முத்தையாபுரம் அடுத்து உள்ள ராஜீவ் நகர் பகுதியில் இருக்கும் உப்பு குடோன் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டம், முத்தையாபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுந்தர், தலைமை காவலர் அருணாச்சலம், முத்தையாபுரம் தனிப்பிரிவு காவலர் ஜான்சன் மற்றும் தெர்மல் நகர் தனிப் பிரிவு காவலர் செல்வின் ராஜ் ஆகியோர் நேரில் சென்று குடோனைச் சுற்றி வளைத்தனர்.

அப்போது, கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லாரி, எடை இயந்திரம் மற்றும் 150 டன் பொட்டாஷ் உரம் ஆகியவை இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து இவை அனைத்தையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும், இது தொடர்பாக மூன்று பேரைப் பிடித்த தனிப்படை காவல் துறையினர், தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்போது கடத்தப்பட்ட 150 டன் எடை கொண்ட பொட்டாஷ் உரத்தின் மதிப்பு சுமார் 1 கோடி ரூபாய் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இது குறித்து கடத்தலில் ஈடுபட்ட முத்தையாபுரம் அய்யங்கோவில் தெருவைச் சேர்ந்த தவசி முத்து என்பவரது மகன் மாதவன் (35), பாலபாண்டி நகரைச் சேர்ந்த கருப்பையா மகன் மதியழகன் (55) மற்றும் வல்லநாட்டைச் சேர்ந்த அருணாச்சலம் மகன் கொம்பையா (35) ஆகிய 3 பேரையும் கைது செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேநேரம், இந்த கடத்தலில் முதன்மை நபராகக் கருதப்படும் தூத்துக்குடியைச் சேர்ந்த முத்து என்பவரை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், விவசாயத்திற்கு அதிகளவில் பயன்படுத்தப்படும் பொட்டாஷ் உரத்திற்கு தட்டுப்பாடும், அதனால் விலை ஏற்றமும் தமிழ்நாட்டில் தொடர்ந்து நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: வடசென்னையில் தொடர் பைக் திருட்டு - பொல்லாதவன் பிரதர்ஸ் சிக்கியது எப்படி?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.