ETV Bharat / state

திருவாரூர் தொகுதிகள் வலம்: தேர்தல் 2021; எதிர்பார்ப்பும், களநிலவரமும்...!

author img

By

Published : Apr 2, 2021, 4:32 PM IST

thiruvarur district watch
திருவாரூர் தொகுதிகள் வலம்

சோழ சாம்ராஜ்யத்தின் ஐந்து பாரம்பரிய நகரங்களில் ஒன்று திருவாரூர். முதலாம் குலோத்துங்கச் சோழனின் தலைநகரமாக இருந்தது திருவாரூர். புறாவுக்காகச் சதைகளை அறுத்து தந்த சிபி சக்கரவர்த்தியும், பசுவுக்காக மகனைத் தேர்க்காலில் கொன்ற மனுநீதிச் சோழன் ஆண்ட ஊர். சங்கீத சக்கரவர்த்திகளான மும்மூர்த்திகள் பிறந்த ஊர். ஊரடைத்து உருண்டோடி வரும் ஆசியாவின் பெரியத் தேருக்குப் பெயர் பெற்றது திருவாரூர். சமயக்குரவர்களில் மூவரால் பாடப்பட்ட தியாகராஜர் கோயில், ஒட்டக்கூத்தரால் கட்டப்பட்டதாகச் சொல்லப்படும் கூத்தனர் சரஸ்வதி கோயில், முத்துப்பேட்டையில் உள்ள பழமையான பள்ளிவாசல் மாவட்டத்தின் ஆன்மிக அடையாளங்கள்.ஆங்கிலேயர் காலத்திலேயே பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட முத்துப்பேட்டை அலையாத்திக்காடுகள், உதய மார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம் மாவட்டத்தின் சுற்றுலாத் தலங்களாகும். காவிரியாலும், அதன் கிளை நதிகளாலும் மேனியெங்கும் பச்சைப் போர்த்தியது போல செழித்திருக்கும் திருவாரூரின் முக்கியத் தொழில் விவசாயம். மாவட்டத்தின் 70 விழுக்காடு மக்களின் தொழில் விவசாயமே. ஒருங்கிணைந்த நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து கடந்த 1997ஆம் ஆண்டு பிரிக்கப்பட்ட திருவாரூர் மாவட்டம், வடக்கில் மயிலாடுதுறை, கிழக்கில், நாகப்பட்டினம், தென்மேற்கு திசையில் தஞ்சாவூர் மாவட்டங்கள் எல்லைகளாக அமைந்துள்ளன.

வாசல் :

மக்களவைத் தேர்தலின் போது தனது சட்டப்பேரவைத் தொகுதிகளை அண்டை மாவட்டங்களுக்கு இரவல் கொடுத்து விடும் திருவாரூர் மாவட்டத்தில், திருத்துறைப்பூண்டி (தனி), மன்னார்குடி, திருவாரூர், நன்னிலம் ஆகிய நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன.

தொகுதிகள் உலா:

திருத்துறைப்பூண்டி (தனி): திருத்துறைப்பூண்டித் தொகுதியின் பிரதானத் தொழில் விவசாயம். முத்துப்பேட்டை அலையாத்திக் காடுகள், உதயமார்த்தாண்டபுரத்தில் இருக்கும் பறவைகள் சரணாலயம் இத்தொகுதியின் சுற்றுலாத் தலங்கள். தொகுதியின் பிரதான பிரச்னை போக்குவரத்து நெரிசல்.

இதனைக் குறைக்க இங்கு புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது. முத்துப்பேட்டை ஆசாத் நகர் பகுதியில் மீன்பிடித் துறைமுகம் அமைக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைத்துவருகின்றனர். திருத்துறைப் பூண்டியின் அருகே இருக்கும் கிராமங்களில் குடிநீர் பிரச்னை நீடித்து வருகிறது. பெரியதாக வளர்ச்சி அடையாதத் தொகுதியாகத் திருத்துறைப்பூண்டி தொகுதி இருந்து வருகிறது.

மன்னார்குடி: சமீபகால தமிழ்நாடு அரசியல் நிலவரத்தில் அதிகம் அடிப்பட்ட, அடிபடும் பெயர் மன்னார்குடி. திருவாரூரின் தேர் அழகு என்றால், குலோத்துங்கச் சோழனால் கட்டப்பட்ட இங்குள்ள ராஜகோபாலசுவாமி கோயிலின் உயரமான மதில் இந்தத் தொகுதியின் சிறப்புகளுள் ஒன்று.

மாவட்டத்தின் அரசு தலைமை மருத்துவமனை மன்னார்குடியில் அமைந்துள்ளது. இத்தொகுதியில் உள்ள நீடாமங்கலம் ரயில் நிலையத்தில் இருந்துதான் தமிழ்நாட்டின் நியாய விலைக்கடைகளுக்கு அரசி மூட்டைகள் செல்கின்றன. இங்கு நான்கு ரயில் வழித்தடங்கள் இருக்கின்றன. இந்தப் பகுதியில் ரயில்கள் செல்வதற்காக வாகன ஓட்டிகள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளதால், நீடாமங்கலம் பகுதியில் ரயில்வே மேம்பாலமும், புறவழிச்சாலையும் அமைக்க வேண்டும் என்பது இத்தொகுதி மக்களின் நீண்ட காலக் கோரிக்கை.

மன்னார்குடியில் பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்; தொகுதியில் வேளாண்மைக் கல்லூரி, பெண்கள் கல்லூரி தொடங்கப்பட வேண்டும் என்பன தொகுதி மக்களின் பிற கோரிக்கைகள்.

திருவாரூர் தொகுதிகள் வலம்: தேர்தல் 2021; எதிர்பார்ப்பும், களநிலவரமும்...!

திருவாரூர்: ஆன்மிகம், அரசியல் ரீதியாகப் புகழ்பெற்றத் தொகுதி இது. சைவ, சமயம் சார்ந்த கோயில்களில் பெரிய கோயிலான தியாகராஜர் கோயிலும், பெரிய தேரான ஆழித்தேர் இங்குதான் அமைந்துள்ளது. மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் அரசியல் வாழ்வில் மிக முக்கியமான ஊர் இது.

தனித் தொகுதியாக இருந்த திருவாரூர், கடந்த 2011ஆம் ஆண்டுக்குப் பின்னர் பொதுத் தொகுதியாக மாற்றப்பட்டது. திருவாரூர் - காரைக்குடி ரயில் பாதை அமைக்க வேண்டும்; சுற்றலாத்தலமாக அறிவிக்கப்பட்ட பெரும்பண்ணையூர் தேவாலயத்தை மேம்படுத்த வேண்டும் என்பன இத்தொகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளன.

இங்கு விவசாயம் சார்ந்த தொழிற்சாலை அமைக்க வேண்டும்; வைக்கோலில் இருந்து காகிதம் அட்டை தயாரிக்கும் தொழிற்சாலைத் தொடங்க வேண்டும்; திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட வேண்டும்; குண்டும், குழியுமாக உள்ள தஞ்சை நாகப்பட்டினம் நெடுஞ்சாலையைச் சீரமைக்க வேண்டும்; அரசு மருத்துவமனை, காவலர்கள் குடியிருப்பு கழிவுகள், வாஞ்சியாற்றில் கலப்பதைத் தடுக்க வேண்டும் என்பன தொகுதி மக்களின் கோரிக்கைகளாகும்.

நன்னிலம்: முப்போகம் விளையும் தொகுதி நன்னிலம். உணவுத்துறை அமைச்சரின் தொகுதி. தொகுதியில் அரசு வேளாண் கல்லூரி தொடங்க வேண்டும்; கரும்பு உற்பத்தியை மீட்டெடுக்கும் வகையில் சர்க்கரை ஆலை ஒன்று தொடங்கப்பட வேண்டும்; இங்குள்ள மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும்; காகிதம் மற்றும் கயிறு தொழிற்சாலை தொடங்க வேண்டும்; பேரளத்தில் சாலைகளை சீரமைத்து ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும்; தொகுதியின் பல பகுதிகளில் மயானத்திற்குச் செல்ல சரியான பாதை இல்லை என்பதால் பாதை அமைத்து தரவேண்டும் என்பன தொகுதியின் கோரிக்கைகளாகும்.

களநிலவரம்:

காவிரி, அதன் கிளை நதிகளால் விவசாயத்தில் செழித்திருக்கிறது திருவாரூர் மாவட்டம். ஒருங்கிணைந்த தஞ்சையில் இருந்த போது நெற்களஞ்சியமாக இருந்த திருவாரூர், இன்றும் மாநிலத்தின் நெல் தேவையில் கணிசமான அளவில் பூர்த்தி செய்கின்றன. விவசாயப் பூமி என்பதால், வேளாண்மைக் கல்லூரி அமைக்க வேண்டும்; வேளாண்மை சார்ந்த தொழில்சாலைகள் அமைக்க வேண்டும் என்பது மாவட்டம் முழுமைக்குமான கோரிக்கையாக உள்ளது.

அதே போல் சட்டக்கல்லூரி தொடங்கப்பட வேண்டும் என்பதும் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. மாவட்டத்தின் பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதும், பெரும்பாலான குக்கிராமங்கள் சாலை வசதிகள் இல்லாமல் இருப்பதும், மாவட்டத்தின் வளர்ச்சிக்குத் தடையாக உள்ளது.

இம்மாவட்டத்திலுள்ள நான்கு தொகுதிகளில் மூன்றில் திமுக வெற்றி பெற்றுள்ளது. நன்னிலம் தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் காமராஜ் வெற்றி பெற்றுள்ளார். திருத்துறைப்பூண்டி, திருவாரூர் தொகுதிகளில் இடதுசாரிகள், திமுகவிற்குப் பலம் அதிகம். மன்னார்குடி தொகுதியில் அமமுகவின் 'வாய்ஸ்' கொஞ்சம் இருந்தாலும், அக்கட்சியின் வேட்பாளர் தொகுதிக்குள் அதிகம் பரிட்சையம் இல்லாததால் பெரியப் பாதிப்புகளை ஏற்படுத்த முடியாது.

நன்னிலத்தில் அமைச்சருக்கு 'வாய்ஸ்' இருந்தாலும், சிறுபான்மையினரின் வாக்கு வங்கியால் திமுக கடுமையாக 'டஃப்' கொடுக்கும் என்கின்றனர் தேர்தல் நோக்கர்கள்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.