ETV Bharat / state

பருத்தி கொள்முதல் விவகாரம் - விவசாயிகள் சாலை மறியல்

author img

By

Published : Jul 13, 2020, 9:31 PM IST

திருவாரூர்: நான்கு நாள்களாக பருத்தியை கொள்முதல் செய்யாமல் காத்திருக்க வைப்பதாகக் கூறி நூற்றுக்கும் மேற்பட்ட பருத்தி விவசாயிகள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பருத்தி கொள்முதல் விவகாரம்:  விவசாயிகள் சாலை மறியல்
Thiruvarur cotton farmers protest

திருவாரூர் மாவட்டம் முழுவதும் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் இந்தாண்டு விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்துள்ளனர். தற்போது பருத்தி அறுவடை செய்யும் பணி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் அறுவடை செய்யும் பருத்தியை அரசு சார்பில் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் விவசாயிகள் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை அன்று நடைபெறும் ஏலத்தின் மூலம் விற்பனை செய்து வருகின்றனர்.

இதனையடுத்து திருவாரூர் பைபாஸ் சாலையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நான்கு நாள்களாக பருத்தியை கொள்முதல் செய்யாமல் காத்திருக்க வைப்பதாக குற்றஞ்சாட்டி விவசாயிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் அலுவகர்கள் தனியார் வியாபாரிகளுடன் இணைந்து விவசாயிகளிடம் குறைந்த அளவிலேயே பருத்தியை கொள்முதல் செய்வதாகவும் பல ஆயிரம் பருத்தி தனியார் வியாபாரிகளிடம் குறைந்த விலைக்கு விற்கப்படுவதாகவும் விவசாயிகள் குற்றஞ்சாட்டினர்.

பின்னர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்களிடம் காவல் துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையில், அனைத்து விவசாயிகளிடமும் டோக்கன் அடிப்படையில் பருத்தியை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உத்தரவாதம் அளித்தனர். அதன்படி விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சாலை மறியல் காரணமாக திருவாரூர் நாகை தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.