ETV Bharat / state

அடுக்குமாடி குடியிருப்பு பூங்காவில் விளையாடிய 2 குழந்தைகள் பலி.. கோவையில் நிகழ்ந்த சோகம்! - ELECTRIC SHOCK in Coimbatore

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 24, 2024, 11:09 AM IST

2 children Died in Coimbatore due to electric shock: கோவையில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த 2 குழந்தைகள், மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தைகள் வசித்த வந்த அடுக்குமாடி குடியிருப்பு பகுதி
சின்னவேடம்பட்டியில் குழந்தைகள் வசித்த வந்த அடுக்குமாடி குடியிருப்பு பகுதி (Credits - ETV Bharat Tamil Nadu)

கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் மாவட்டம் சின்னவேடம்பட்டி துடியலூர் சாலை, ராமன் விஹார் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இங்கு குழந்தைகள் விளையாட பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவில் அங்குள்ள குழந்தைகள் காலை மற்றும் மாலை வேளைகளில் விளையாடுவது வழக்கம்.

இதற்காக அங்கு ஊஞ்சல், சறுக்கல் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பூங்காவில் நேற்று (வியாழக்கிழமை) மாலை 6.45 மணி அளவில் அங்கு வசிக்கும் பிரசாந்த் என்பவரின் மகன் ஜியான்ஸ்(6) மற்றும் பாலசந்தர் என்பவரின் மகள் வியோமா பிரியா(8) ஆகிய இருவரும் அங்குள்ள சறுக்கில் விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது சறுக்கில் விளையாடிக் கொண்டிருந்த வியோமா பிரியா மற்றும் ஜியான்ஸ் ஆகிய இருவரும் அருகில் உள்ள மின்கம்பத்தில் இருந்து மின்சாரம் தாக்கியதால் மயக்கம் அடைந்து அங்கேயே விழுந்துள்ளனர். இதையடுத்து அங்கிருந்த குழந்தைகள் ஓடிச்சென்று அவர்களின் பெற்றோரிடம் தெரிவித்தனர்.

அவர்கள் உடனடியாக ஓடிவந்து மயங்கி கிடந்த ஜியான்ஸ் மற்றும் வியோமா பிரியா ஆகிய இருவரையும் தூக்கிக் கொண்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர். அங்கு குழந்தைகள் இருவரையும் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர்கள் இருவரும் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர்.

இதுகுறித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சரவணம்பட்டி போலீசார், குழந்தைகளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், விளையாடிக் கொண்டு இருந்த இரண்டு குழந்தைகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: வேங்கைவயல் வழக்கு; காவலர் முரளி ராஜாவிடம் சிபிசிஐடி விசாரணை.. வழக்கு விரைவில் முடிவுக்கு வரும் என நம்பிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.