திருவாரூர் மாவட்டம், அத்திக்கடை பகுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப்பெறக் கோரியும், அச்சட்டத்தை எதிர்த்து தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் அமைப்பின் கிளைத் தலைவர் இப்ராகிம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தஞ்சை மாவட்டம் திருநாகேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த அதிமுக தலைமைக் கழகப் பேச்சாளர் ஜலீல் என்பவர் பங்கேற்றார்.
ஆர்ப்பாட்டத்தில் பேசியதோடு மட்டுமல்லாமல், அவர் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அதிமுக ஆதரிப்பதால், தான் அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகிக்கொள்வதாகவும் பகிங்கரமாக அறிவித்தார். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து திருநாகேஸ்வரம் ஐலீல் கூறுகையில், 'நான் எம்ஜிஆர் காலத்திலிருந்து தலைமைக் கழகப் பேச்சாளராக இருந்து வருகிறேன். தற்போது, எடப்பாடி தலைமையிலான கட்சி குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரிப்பது வேதனையளிக்கிறது. அதிமுகவைச் சேர்ந்த 11 எம்.பி.க்கள் அச்சட்டத்தை ஆதரித்து வாக்களித்தது சரியல்ல.
இஸ்லாமிய மக்களைக் குறிவைத்து தான், இத்தகைய கொடுமையான சட்டத்தைக் கொண்டு வந்துள்ளனர். அதிமுகவின் செயலால் இஸ்லாமியர்கள் இன்று நடுத்தெருவில் நிற்கின்றனர். இஸ்லாமிய மக்களை நசுக்க பாஜகவும் அதிமுகவும் திட்டமிட்டு காய் நகர்த்துகின்றன. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுகிறேன்' எனக் கூறினார்.
இதையும் படிங்க: பாஜகவில் இணைந்த வீரப்பன் மகள்!