திருவண்ணாமலை தீபத்திருவிழா: துர்க்கை அம்மன் உற்சவத்துடன் தொடக்கம்!

author img

By

Published : Nov 25, 2022, 9:13 AM IST

துர்க்கை அம்மன் உற்சவம்

திருக்கார்த்திகை தீபத்திருவிழா வருகின்ற 27 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ள நிலையில், திருவண்ணாமலை நகரின் காவல் தெய்வமாக விளங்கும் துர்க்கை அம்மன் உற்சவம் நேற்று (நவ. 24) வெகு விமர்சையாக நடைபெற்றது.

திருவண்ணாமலை: பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்கிதரும் திருத்தலமாகவும் விளங்குவது திருவண்ணாமலையாகும். இங்குள்ள புகழ்மிக்க அண்ணாமலையார் திருக்கோயிலில் ஆண்டுதோறும் திருக்கார்த்திகை தீபத்திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா தொற்றால் கார்த்திகை தீபத்திருவிழா கோயிலின் பிரகாரத்தில் நடைபெற்றது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு திருக்கார்த்திகை தீபத்திருவிழா பொது வெளியில் நடைபெற உள்ளது. வருகின்ற 27 ஆம் தேதி அண்ணாமலையார் கோயிலில் உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. டிசம்பர் 6 ஆம் தேதி அதிகாலையில் கோயிலின் கருவறையின் முன்பாக பரணி தீபமும், மாலை ஆறு மணிக்கு கோயிலின் பின்புறம் உள்ள 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் மலையின் உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படவுள்ளது.

துர்க்கை அம்மன் உற்சவம்

இந்த ஆண்டு திருக்கார்த்திகை தீபத்திருவிழா நேற்று நகரின் காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் தொடங்கியது. முன்னதாக துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீப ஆராதனை நடைபெற்றது.

பின்னர் துர்க்கை அம்மன் காமதேனு வாகனத்தில் மாடவீதிகளில் வலம் வந்து ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார். இன்றிரவு (நவ. 25) அண்ணாமலையார் கோயிலில் உள்ள பிடாரி அம்மனின் மாடவீதியுலா நடைபெறவுள்ளது. வருகின்ற 27 ஆம் தேதி அதிகாலையில் 5.30 மணி முதல் 7 மணிக்குள் விருச்சிக லக்னத்தில் கொடியேற்றம் நடைபெறவுள்ளது.

இதையும் படிங்க: TODAY HOROSCOPE: நவ.25 இன்றைய ராசிபலன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.