உணவகத்தில் சாப்பிட்ட சிறுமி உயிரிழப்பு - 19 பேர் மருத்துவமனையில் அனுமதி

author img

By

Published : Sep 10, 2021, 11:03 PM IST

உணவகத்தில் சாப்பிட்ட சிறுமி உயிரிழப்பு

ஆரணி அசைவ உணவகத்தில் சாப்பிட்ட சிறுமி உயிரிழந்தார். மேலும் வாந்தி மயக்கம் ஏற்பட்ட 19 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருவண்ணாமலை: மாவட்டம் ஆரணி டவுன் பழைய பேருந்து நிலையம் அருகில் காதர் பாட்ஷா என்பவர் அசைவ உணவகம் நடத்தி வருகிறார். இந்த உணவகத்திற்கு லட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்த ஆனந்த் தனது மனைவி பிரியதர்ஷினி, குழந்தைகள் லோசினி (10), சரண் (14) ஆகியோருடன் சென்று பிரியாணி சாப்பிட்டுள்ளார்.

உணவு சாப்பிட்ட சிறிது நேரத்தில் அவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனே நான்கு பேரும் ஆரணி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனையில் ஆனந்த், சரண், பிரியதர்ஷினி ஆகியோர் அனுமதிக்கப்பட்டனர்.

ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி லோசினி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், இதே உணவகத்தில் ஆரணி டவுன் பகுதியைச் சேர்ந்த ஜாகிர், பாத்திமா முகமது, விஷ்ணு உள்ளிட்டோர் சாப்பிட்டுள்ளனர்.

இவர்களுக்கும் உணவு சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே வாந்தி மயக்கம் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையிலும், ஆரணி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து ஆரணி கோட்டாட்சியர் கவிதா, தாசில்தார் சுபாஷ் மற்றும் ஆரணி டி.எஸ்.பி கோட்டீஸ்வரன் ஆகியோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணைக்கு பின்பு சிறுமி உயிரிழப்புக்கு காரணமான அசைவ உணவகத்திற்கு ஆரணி கோட்டாட்சியர் கவிதா சீல் வைத்தார். இச்சம்பவம் குறித்து வருவாய், காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: சாலை விபத்தில் பெண் மருத்துவர் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.