திருவண்ணாமலை மாவட்டம், போளூர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் மருத்துவராக உள்ளார். இவரது மனைவி கார்த்திகா(29) போளூரில் தனியார் கிளினிக் நடத்தி வந்தார். பல் மருத்துவரான இவர், 8 மாத கார்ப்பிணியாக இருந்ததால் அவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதன்பின்னர், அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து கரோனா பரிசோதனை செய்ததில் அவருக்கு தொற்று உறுதியானது.
இதையடுத்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, ஆக்ஸிஜன் உதவியுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த அவர், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். வளைகாப்பு நிகழ்ச்சியின் மூலம் அவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருக்கக்கூடும் என கருதப்படுகிறது.
மேலும், அவருடைய கிளினிக்கில் பணிபுரிந்த அனைவருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்த பெண் மருத்துவரின் தந்தையும், தாயும் மருத்துவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஏழைகளுக்கு இலவச மருத்துவம் பார்த்த 'மக்களின் மருத்துவர்' காலமானார்!