ETV Bharat / state

பணத்தை இரட்டிப்பாக்கித் தருவதாக ஆசைகாட்டி பல கோடி ரூபாய் மோசடி... 4 பெண்களிடம் விசாரணை

author img

By

Published : Aug 26, 2022, 6:04 PM IST

Etv Bharat பாதிக்கப்பட்ட கிராம மக்கள்
Etv Bharat பாதிக்கப்பட்ட கிராம மக்கள்

பணத்தை இரட்டிப்பாக்கித் தருவதாகக் கூறி, கிராம மக்களிடம் பல கோடி ரூபாய் பணம், நகைகளைப்பெற்று 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஏமாற்றி வந்த நான்கு பெண்களிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலை அடுத்த மங்கலம் கிராமத்தைச்சேர்ந்தவர்கள் லட்சுமி, சசிகலா மற்றும் அமிர்தம். இவர்கள் உள்பட நான்கு பேர் சேர்ந்து மங்கலம், ஆனந்தல், வேடந்தவாடி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 100க்கும் மேற்பட்டோரிடம் ஆசை வார்த்தைக்கூறி கோடிக்கணக்கில் பணமும், தங்க நகைகளையும் கடனாகப்பெற்றுள்ளனர்.

தங்களுக்கு வங்கியிலிருந்து 40 கோடி ரூபாய்க்கு மேல் பணம் வரவேண்டியுள்ளதாகக் கூறியும், காவல் துறையின் தலைவர் எழுதியதாக கடிதத்தையும் காண்பித்து கிராம மக்களை ஏமாற்றியுள்ளனர். பின்னர், ஆண்டுகள் பல கழிந்தும் பணமும், நகையும் வராததால் பொதுமக்கள் பல முறை முறையிட்டதையடுத்து எழுதப்படாத பத்திரமும், பணத்திற்காகப் பல்வேறு வங்கிகளின் காசோலைகளையும் கொடுத்து சமாதானப்படுத்தினர்.

குறிப்பிட்ட கால இடைவெளி வரையிலும் அசல் பணம் மற்றும் நகையையும் கொடுக்காமல் ஏமாற்றியும் கொடுத்தவர்களை 4 பெண்களும் மிரட்டியும் வந்துள்ளனர். குறிப்பாக காவல் நிலையம் சென்றால், பணம் வந்தவுடன் காவல் நிலையம் சென்றவர்களுக்கு நிச்சயம் பணம் மற்றும் நகைகளை கொடுக்க மாட்டோம் என்றதால், செய்வதறியாத கிராமமக்கள் புகார் அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர்.

6 ஆண்டுகள் ஆனதையடுத்து திருவண்ணாமலை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் கண்ணீர் மல்க நேற்று (ஆக-25) புகார் மனு அளித்தனர். இதனையடுத்து, 4 பெண்களையும் நேற்று (ஆக-25) மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அழைத்து வந்து 3 மணிநேரத்திற்கும் மேலாக காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

4 பெண்கள் கூட்டணி அமைத்து ஆசை வார்த்தைகள் கூறி தங்களை ஏமாற்றிவிட்டதாகவும், உடனடியாக அவர்களிடமிருந்து தங்கள் பணம் மற்றும் நகைகளை மீட்டு அவர்களை கைது செய்ய வேண்டும் என்று கண்ணீருடன் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பாதிக்கப்பட்டோர் கோரிக்கை விடுத்தனர். அரசின் லோகோவுடன் கூடிய காவல் துறை உயர் அலுவலரின் கையெழுத்து என நம்பி பணம் கொடுத்து, தற்போது கிராம மக்கள் ஏமாற்றப்பட்டுள்ள சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட கிராம மக்கள்

இதையும் படிங்க: பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ஆட்டோ ஓட்டுநர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.