ETV Bharat / state

நீட் தேர்வு விவகாரத்தில் ஆளுநர் கருத்துக்கு அமைச்சர் எ.வ.வேலு பதிலடி!

author img

By

Published : Aug 13, 2023, 4:12 PM IST

Updated : Aug 13, 2023, 4:34 PM IST

திருக்கார்த்திகை தீபத் திருவிழாவிற்குள் திருவண்ணாமலையில் உள்ள அய்யங்குளம் சீரமைக்கும் பணி முடிவடைந்துவிடும் என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார்.

பேட்டி அளித்த அமைச்சர் எ வ வேலு
பேட்டி அளித்த அமைச்சர் எ வ வேலு

நீட் தேர்வு ரத்து செய்ய முடியாது என்று கூறிய தமிழக ஆளுநர்; அமைச்சர் எ.வ வேலு பதிலடி!

திருவண்ணாமலை: நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது அய்யங்குளம். 1896 ஆம் ஆண்டு ரமண மகரிஷி முதன் முதலில் திருவண்ணாமலைக்கு வந்த போது இந்த குளக்கரையில் நீராடினார் என்று பக்தர்கள் கூறுகின்றனர். இந்த அய்யன்குளத்தில் கார்த்திகை பத்தாம் நாள் தீப திருவிழா முடிந்து மூன்று நாட்கள் தெப்பத் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

இந்த அய்யங்குளமானது மூன்று ஏக்கர் பரப்பளவில் 360 அடி நீளமும், 360 அடி அகலமும், 32 அடி ஆழமும் கொண்டுள்ள அலங்காரப் படிக்கட்டுகளுடன் கட்டப்பட்ட குளக்கரையாகும். இந்த அய்யன்குளம் நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டது. குறிப்பாக கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் கார்த்திகை தீப திருவிழா முடிந்து அய்யங்குளத்தில் தீர்த்த வாரி நடைபெற்ற பொழுது கூட்ட நெரிசலில் சிக்கி நான்கு சிவாச்சாரியார்கள் பலியாகினர்.

இதனைத் தொடர்ந்து அப்போதைய திருவண்ணாமலை சட்டமன்ற உறுப்பினர் எ.வ.வேலு திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அய்யங்குளம் சீரமைத்து செப்பனிடப்படும் என வாக்குறுதி அளித்தார். இதனைத் தொடர்ந்து திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அய்யங்குளக்கரை சீரமைக்கும் பணிகள் தொடங்கியது. அய்யங்குளம் சீரமைக்கும் பணிகளை தமிழக நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலு இன்று ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது பணிகள் எவ்வாறு நடைபெற்று வருகின்றது எனவும், குளக்கரையில் உள்ள படிக்கட்டுகள், கைப்பிடி சுவர்கள், குளத்திற்கு வரும் நீர்வரத்து வழிப்பாதை உள்ளிட்ட அனைத்து பணிகளும் விரைந்து முடிக்க வேண்டும் என அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் எ.வ வேலு, "ஆன்மீக நகரமான திருவண்ணாமலையின் மையப்பகுதியில் அய்யங்குளக்கரை பல ஆண்டுகளாக சீர் செய்யாமல் புதர்கள் மண்டி காணப்படுவதுடன் சேரும், சகதியும் அதிகமாக உள்ளதால் தெப்பத் திருவிழாவை நடத்த சிரமமாக உள்ளதாக ஆன்மீக பக்தர்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் தற்போது அய்யங்குளம் சீரமைக்கப்பட்டு வருகிறது.

இது மட்டுமின்றி அய்யங்குளத்தின் மையப் பகுதியில் உள்ள மண்டபத்தில் பக்தர்களின் கோரிக்கையை ஏற்று அண்ணாமலையார் மலையை நோக்கியவாறு நந்தி சிலை நிறுவப்படும் எனவும், அய்யங்குளக்கரையின் நான்கு புறங்களிலும் உயர் கோபுர மின் விளக்குகள் பொருத்தி பாதுகாக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும் இந்த பணியில் தூய்மை அருணை சார்பில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தூய்மை பாதுகாவலர்கள் ஈடுபட்டு வருவதாகவும், விரைவாக இந்த பணிகளை முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், வரும் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு இந்த பணிகள் அனைத்தும் முடிக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும் கிரிவலப் பாதையில் அசைவ உணவகங்கள் அகற்றப்பட வேண்டும் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்திற்கு பதில் அளித்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு உணவு சாப்பிடுவோரின் தனிப்பட்ட கருத்திற்கு தானோ அல்லது அரசோ தலையிட முடியாது என்றும், ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பமே அவர்களுக்கு ஏற்ப உணவு வகைகளை சாப்பிட்டு வருகின்றனர்.

ஆகையால் இந்த உணவைத்தான் சாப்பிட வேண்டும் இந்த உணவைத்தான் விற்க வேண்டும் என்று தன்னாலோ தமிழக அரசாலோ தெரிவிக்க முடியாது. உணவு சாப்பிடுபவர்களின் தனிப்பட்ட விருப்பம் அதை கட்டுப்படுத்த இயலாது என்றும், குறிப்பாக மாதா மாதம் வரும் பௌர்ணமி தினத்தின் பொழுது கிரிவலப் பாதையில் உள்ள உணவகங்களில் அசைவ உணவு சமைக்கப்படுவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்தார்.

மேலும், நீட் தேர்வு ரத்து விவகாரம் நீட் தேர்வு ரத்து செய்ய முடியாது என தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியின் கருத்திற்கு பதில் அளித்த அமைச்சர் எ.வ வேலு கிராமப்புறங்களில் இருந்து வரும் ஏழை எளிய மாணவர்கள் நன்றாக பயின்று பல்வேறு பணிகளுக்கு செல்ல வேண்டும் என அப்போதைய தமிழக முதலமைச்சராக இருந்த கருணாநிதி ஆட்சிக் காலத்தில் தான் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

தற்போது 12 ஆண்டுகள் அரசு பள்ளியில் பயின்று நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவர்கள் நேரடியாக மருத்துவ படிப்பிற்குள் நுழைய முடியாதவாறு மத்திய அரசு நீட் தேர்வு என்ற ஒரு விவகாரத்தை வைத்துள்ளதாகவும், குறிப்பாக 12 ஆண்டுகள் அரசு பள்ளியில் படித்து தேர்ச்சி பெற்ற ஒரு மாணவர் மூன்று மாதம் தனியாரிடம் பயின்று நீட் தேர்வு எழுதினால் எவ்வாறு தேர்ச்சி அடைய முடியும்.

ஆகையால் தமிழக அரசும் தமிழக முதலமைச்சர், கிராமப்புற மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு நீட் தேர்வை ரத்து செய்வதில் தயக்கம் காட்ட மாட்டார்கள் எனவும், கிராமப்புற மாணவர்களின் எதிர்காலத்திற்காக திராவிட மாடல் ஆட்சி நடைபெற்று வருவதாக கூறினார்.

இதனைத் தொடர்ந்து அண்ணாமலையார் கோயில் சுற்றியுள்ள நான்கு மாட வீதியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளை நடந்து சென்று ஆய்வு செய்த அமைச்சர் எ.வ வேலு சாலை அமைக்கும் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: அனைத்து வீடுகளிலும் மூவர்ண தேசியக் கொடியை ஏற்றி கொண்டாட வேண்டும் - ஆளுநர் ஆர்.என்.ரவி

Last Updated : Aug 13, 2023, 4:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.