ETV Bharat / state

அண்ணாமலையின் பாதயாத்திரையால் எந்த மாற்றமும் நிகழாது - அமைச்சர் எ.வ.வேலு விமர்சனம்

author img

By

Published : Jul 26, 2023, 9:44 PM IST

Etv Bharat
Etv Bharat

Annamalai Padayatra:மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வேல் யாத்திரை நடத்தியபோதும் பாஜகவால் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க முடியாத நிலையில், அண்ணாமலை நடத்தும் பாதயாத்திரையால் இங்கு ஒரு மாற்றமும் நிகழாது என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

அண்ணாமலையின் பாதயாத்திரையால் எந்த மாற்றமும் நிகழாது - அமைச்சர் எ.வ.வேலு விமர்சனம்

திருவண்ணாமலை: திருப்பதியை போல, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலிலும் கட்டண தரிசனம் வசூலிக்க இருப்பதாக அமைச்சர் எ.வ.வேலு பேசியுள்ளார். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் (kalaignar magalir urimai thittam) திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 24ஆம் தேதி முதல் செயல்படுத்தப்பட்டு பயனாளிகளின் விண்ணப்பப் பதிவு முகாம் நடைபெற்று வருகிறது.

இந்த முகாமை இன்று தமிழ்நாடு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, தமிழ்நாடு துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ், சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி, பே.சு.தி.சரவணன் ஆகியோர் திருவண்ணாமலை, மெய்யூர், வாணாபுரம், சதாகுப்பம் ஆகியப் பகுதிகளில் இன்று (ஜூலை 26) ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, குடும்பத்தின் பாரம் அறிந்து குடும்பத்தை நடத்துவது பெண்கள்தான் என்றும்; ஆகவே அவர்களுக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை கிடைக்கும் வகையில் இந்தத் திட்டம் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களால் கொண்டுவரப்பட்டது என்றார். ஏற்கனவே, இதற்காக ரூ.7,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், வரும் ஆண்டுகளில் பயனாளிகளின் எண்ணிக்கையைப் பொறுத்து நிதி ஒதுக்கப்படும் என்றும், இதற்கு தகுதியானவர்கள் தவிர வேறு யாரும் இந்த திட்டத்தில் பயனடையப் போவதில்லை என்றும் அவர் கூறினார்.

திருவண்ணாமலை மாவட்டத்தைப் பொறுத்தவரை, 7 லட்சத்து 89 ஆயிரத்து 822 பொது விநியோக அட்டைகள் உள்ளது என்றும், மாவட்ட முழுவதும் 1,627 பொது விநியோக கடைகள் இயங்குவதாகவும், மாவட்டத்தில் 991 முகாம்கள் அமைக்கப்பட்டு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு வருவதாகவும், இந்த பணிகளை கண்காணிக்க 221 மண்டல அலுவலர்கள் 70 கண்காணிப்பு அலுவலர்கள், 20 பிரிவுகளில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் இந்தப் பணிகள் முறையாக நடைபெறுகிறதா? என்று தாம் ஆய்வு மேற்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆன்மிகமும் திராவிடமும் இணைந்த திமுக ஆட்சி: மத்திய பாஜக அரசு ஒவ்வொரு மாநிலத்திலும் ஆன்மிகத்தை முன்னிறுத்தி தேர்தல் பிரசாரம் செய்து வருவதாகவும், குறிப்பாக தமிழகத்தைப் பொறுத்தவரை ஆன்மிகத்தையும் திராவிடத்தையும் இணைத்து தற்போதைய திமுக அரசு ஆட்சி செய்து வருவதாகவும் தெரிவித்தார்.

இதற்கு முக்கியத்துவம் அளித்து வரும் திமுக ஆட்சியில் இம்மாவட்டம் உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள கோயில்கள் புனரமைக்கப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. ஆன்மிகத்தை மையப்படுத்தி தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வர வேண்டும் என்ற நோக்கோடு செயல்பட்டு வருவதாகவும், முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் முருகன் வேல் யாத்திரை நடத்தியும் பாஜகவால் ஆட்சிக்கு வர முடியவில்லை என்றும் அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார்.

திருப்பதியை போல, திருவண்ணாமலையிலும் தரிசன கட்டணம்: அண்ணாமலை நடத்தும் பாதயாத்திரையால் தமிழகத்தில் எந்த ஒரு மாற்றமும் நிகழப் போவதில்லை என்றும், திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் ரூ.500 கட்டண தரிசனம் வசூலிப்பது தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாகவும், திருப்பதியில் கட்டணம் கொடுத்து சாமி தரிசனம் செய்வது போல் திருவண்ணாமலையிலும் ஏன் செய்யக்கூடாது எனவும்; இதற்கு உள்நோக்கம் கற்பித்து பேசக்கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: மணிப்பூர் சம்பவத்தைக் கண்டித்து திராவிடர் கழக மகளிரணி போராட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.