திருவண்ணாமலை: காங்கிரஸ் கட்சியின் சார்பில் திருவண்ணாமலையில் அரசியலமைப்பு சட்டத்தைப் பாதுகாப்போம், கையோடு கை கோர்ப்போம் என்ற மாபெரும் பரப்புரை இயக்கம் மற்றும் மண்டல ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட மண்டல நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றிய ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், “ திருவண்ணாமலைக்கு வந்தால் அதிசயங்கள் நடக்கும் என்று கூறுவதை இதுவரை நான் ஏற்கவில்லை. ஆனால், தற்போது இந்த கூட்டத்தினை பார்த்து நம்புகின்றேன்.
நான் திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையாரை நம்பி வந்துள்ளேனே தவிர, வேறு எந்த அண்ணாமலையையும் நம்பி வரவில்லை. எனக்கு நாடாளுமன்ற உறுப்பினர், தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் என பல பதவிகளை வழங்கியவர் சோனியா காந்தி தான். தற்போது மீண்டும் சட்டமன்றத்திற்கு போட்டியிட அவர் என்னைத் தேர்வு செய்துள்ளார்.
இன்று கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி அவர்கள் யாரும் செய்ய முடியாத ஒன்றை நடத்திக் காட்டியுள்ளார். ராகுல் காந்தி பிரதமராக வரவேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் பாடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்” எனப் பேசினார்.
பின்னர் பேசிய காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி, “காங்கிரஸ் கட்சி ஆட்சியில் கல்வி கட்டணம், விவசாயிகளின் கடன் உள்ளிட்ட பல கடன்களைக் காங்கிரஸ் அரசு தள்ளுபடி செய்தோம். ஆனால் கடந்த 9 ஆண்டுகாலம் ஆட்சி நடத்தும் பிரதமர் மோடி பெரும் முதலாளிகளின் 10 லட்சம் கோடி ரூபாய் கடன்களை மட்டுமே தள்ளுபடி செய்துள்ளார், இது நியாயம் தானா ..?
பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியில் தான் கிராமத்திற்கு ஒரு ஆரம்ப பள்ளி என 18-க்கும் மேற்பட்ட பள்ளிக்கூடம் துவக்கப்பட்டது. இதனால் தான் தமிழகம் தற்போது கல்வியில் முதலிடம் பெற்றுள்ள மாநிலமாக உள்ளது. அன்று மகாத்மா காந்தி மேற்கொண்ட தண்டி யாத்திரை போல் தற்போது ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள இந்திய ஒற்றுமை பயண நடைப்பயணத்திற்கு ஆதரவும், புகழும் பொது மக்களிடம் இருந்து கிடைத்துள்ளது.
பாஜக வளர்ந்து விட்டது என்று பாஜகவினர் செல்லி வருகின்றனர். ஆகவே, அதிமுகவின் கூட்டணி சார்பில் அண்ணாமலையே போட்டியிடட்டும். யார் வெற்றி பெறுகின்றார்கள் என்றும் பார்த்துக் கொள்வோம். அப்போது தெரியும், பாஜக தமிழகத்தில் வளர்ந்துள்ளதா... இல்லை தேய்ந்து போகின்றதா என்று.
கூட்டணி தர்மத்தினை கட்டிக்காப்பாத்துவது திமுக கூட்டணி தான். அதனால் தான் இந்த தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட திமுக ஆதரவளித்துள்ளது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். ஆனால், அதிமுக கூட்டணி சார்பில் யாருமே அறிவிக்கப்படவில்லை. இது தான் அவர்களின் கூட்டணி பலம். தேர்தலைச் சந்திக்கக் கூடிய ஆற்றல், பலம் திமுக கூட்டணிக்கு உள்ளது. ஆனால் பாஜக கூட்டணிக்கு இல்லை” என்றார்.
இதையும் படிங்க: இரட்டை இலைச் சின்னம் எங்களுக்கு தான்; ஏ.சி. சண்முகத்தை சந்தித்த ஓபிஎஸ் பேட்டி