ETV Bharat / state

திருவண்ணாமலையில் கல்லூரி மாணவி தற்கொலையா? உறவினர்கள் போராட்டத்தால் பரபரப்பு

author img

By

Published : Jun 5, 2023, 10:35 PM IST

திருவண்ணாமலையில் அரசு கல்லூரி மாணவி தற்கொலை… இறப்பில் சந்தேகம் இருப்பதாக மாணவியின் தந்தை குற்றச்சாட்டு
திருவண்ணாமலையில் அரசு கல்லூரி மாணவி தற்கொலை… இறப்பில் சந்தேகம் இருப்பதாக மாணவியின் தந்தை குற்றச்சாட்டு

திருவண்ணாமலையில் கல்லூரி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டதையடுத்து, அம்மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் போரட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருவண்ணாமலையில் கல்லூரி மாணவி தற்கொலை - இறப்பில் சந்தேகம் இருப்பதாக மாணவியின் தந்தை குற்றச்சாட்டு

திருவண்ணாமலை: கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த கருணாநிதி என்பவரது மகள் மாணவி கௌசல்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). மாணவி கௌசல்யா திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தார். விடுதியில் தங்கி படித்து வந்த நிலையில், நேற்று (ஜூன் 4) மாணவி கௌசல்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கல்லூரி வளாகத்தில் தற்கொலை செய்து கொண்டார்.

இதனையடுத்து தகவல் அறிந்து அங்கு சென்ற காவல்துறையினர் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், சம்பவம் நடைபெற்ற அரசு கல்லூரியில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் மற்றும் காவல் ஆய்வாளர் உட்பட காவல்துறையினர் கல்லூரியில் முகாமிட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மகளின் இறப்பு குறித்து தகவல் அறிந்து திருவண்ணாமலைக்கு இன்று வந்த பெற்றோர்கள் மாணவியின் கல்லூரிக்குச் சென்று மாணவியின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக அக்கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் தனது மகள் இறப்பில் சந்தேகம் உள்ளதாகவும், மாணவி உள்ள விடுதி அறைக்கும் தற்கொலை செய்து கொண்ட பகுதிக்கும் மூன்று அல்லது ஐந்து கிலோ மீட்டர் தூரம் உள்ளதாகவும், மேலும் தற்கொலை செய்து கொண்ட இடத்திலிருந்து மாணவியை மீட்கப்பட்டதற்கு எந்த வித ஆதாரமும் கல்லூரி சார்பில் காட்டவில்லை என்றும், கல்லூரி நிர்வாகம் மாணவர்களுக்கு தொடர்ந்து மன ரீதியான தொல்லைகளை தந்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் இறந்த மாணவி எழுதி வைத்த கடிதத்திலும் தனக்கு பின்னால் வரும் மாணவிகளுக்கு இத்தகைய துன்பங்கள் வரக்கூடாது என்று தெரிவித்துள்ளதாகவும், தங்கள் மகளின் இறப்பில் சந்தேகம் உள்ளதாகவும், ஆனால் காவல்துறையினர் மற்றும் கல்லூரி நிர்வாகம் இதனை மூடி மறைப்பதாகவும், மாணவி இறப்பு குறித்து கல்லூரி நிர்வாகம் எந்தப் பதிலையும் கூறவில்லை என்றும், எதைப் பற்றி கேட்டாலும், தங்களை சமாதானப்படுத்தும் நோக்கில் கல்லூரி நிர்வாகம் செயல்படுவதாகவும், இறந்த மாணவியின் தந்தை கருணாநிதி வேதனையுடன் தெரிவித்தார்.

மேலும், தனது மகளின் செல்போன் மாயமாகியது தங்களுக்கு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், மாணவியின் தந்தை குற்றம் சாட்டினார். இவ்வாறு திருவண்ணாமலையில் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: பெரம்பலூர் அருகே கோர விபத்து: 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் உட்பட 3 பேர் பலி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.