இறந்தவர் உடலை கட்டிலில் சுமந்த பெண்கள்: வீரளூரில் நீடிக்கும் பிரச்சனை

author img

By

Published : Jan 22, 2022, 7:04 AM IST

community clash in veeralur

திருவண்ணாமலையில் அமைந்திருக்கும் வீரளூர் கிராமத்தில் சுடுகாட்டுக்கு செல்லும் பாதை பிரச்சனை நீடித்து வரும் நிலையில், இறந்தவரின் உடலை பெண்கள் கட்டிலில் சுமந்து சென்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை: கலசப்பாக்கம் தாலுகா வீரளூர் கிராமத்தில் சுடுகாட்டு பாதை பிரச்னை கடந்த நான்கு நாள்களாக நீடித்து வருகிறது.

பட்டியலின மக்கள் செல்லும் சுடுகாட்டு பாதை புதர் மண்டி இருப்பதாகக் கூறி பொது சாலை வழியாக இறந்தவர்களின் உடலை எடுத்துச் செல்ல கலசபாக்கம் தாசில்தார் ஜெகதீசன் பரிந்துரையின் பேரில் ஆரணி கோட்டாட்சியர் கவிதா அனுமதி வழங்கினார்.

இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு, பொது சாலையில் பட்டியலின மக்கள், இறந்தவரின் உடலை எடுத்துச் செல்ல கூடாது எனக் கூறி தகராறு செய்தனர். மேலும், அவ்வூர் மக்கள், பட்டியலின மக்களின் வீடுகள் மற்றும் இருசக்கர வாகனங்களையும் அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர்.

வீரளூரில் நீடிக்கும் பிரச்சனை

அதுமட்டுமல்லாமல், ஊர் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர். அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டதால், வேலூர் சரக டிஐஜி ஆனி விஜயா மற்றும் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவுன்குமார் ரெட்டி மற்றும் ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த 900 காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டு கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

பின்னர் இரு தரப்பினரையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். இதில் கிராம மக்கள் மட்டும் கலந்து கொண்டனர், பட்டியலின மக்கள் கலந்து கொள்ளவில்லை எனக்கூறப்படுகிறது.

community clash in veeralur
இறந்தவர் உடலை கட்டிலில் சுமந்த பெண்கள்

இதனைத்தொடர்ந்து, ஜனவரி 19ஆம் தேதி இரவு, மாநில மனித உரிமைகள் ஆணையம் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். இதன் பின்னர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கலவரத்தில் ஈடுபட்ட 21 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும், பலர் கைது செய்யப்படலாம் என்ற தகவல் பரவியதால் கிராமத்தில் உள்ள ஆண்கள் அனைவரும் தலைமறைவாகினர். இந்நிலையில், வீரளூரில் கருப்பாயி (71) என்பவர் உயிரிழந்தார். அம்மூதாட்டியின் உடலை அடக்கம் செய்வதற்கும். சடங்குகள் செய்வதற்கும் மூதாட்டியின் வாரிசுகள் வீட்டில் இல்லாததால் பெண்கள் ஒன்று கூடி உடலை கட்டிலில் சுமந்து கொண்டு வீரளூர் பேருந்து நிலையம் அருகே வந்தனர்.

community clash in veeralur
இறந்தவர் உடலை கட்டிலில் சுமந்த பெண்கள்

கிராமத்தின் அனைத்து தெருக்களிலும் காவல் துறையினர் தடுப்புகள் அமைத்து உள்ளதால், மூதாட்டியின் உடலை சாலையில் வைத்து பெண்கள் ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து பெண்கள், இறந்த மூதாட்டியின் உடலை எடுத்து வந்து வீட்டின் முன்பு வைத்து தலைமறைவாக இருந்த மூதாட்டியின் மகனை வர வைத்து சடங்குகள் செய்தனர். இதன் பிறகு, மூதாட்டியின் உடலை பெண்கள் சுமந்து சென்று அடக்கம் செய்தனர்.

இதையும் படிங்க: இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட 108 படகு உரிமையாளர்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.