திருவள்ளூர்: ஆந்திர எல்லைப் பகுதியில் அமைந்துள்ள திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே. பேட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கன மழைக்கு தரைப்பாலங்கள் மூழ்கிய நிலையில் சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், பெரும்பாலான பகுதிகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
தொடர் மழையினால் நீர்நிலைகள் நிரம்பியுள்ள நிலையில் நேற்று (நவம்பர் 18) காலை முதல் இரவு வரை தொடர்ச்சியாகப் பெய்துவரும் கன மழையினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
பள்ளிப்பட்டிலிருந்து சோளிங்கர் செல்லும் மாநில நெடுஞ்சாலையில், அத்திமாஞ்சேரிப்பேட்டை அருகில் சாலைக்கு நடுவில் தரைப்பாலத்தில் வெள்ளம் சீரிப்பாய்ந்து செல்கின்றது. வெள்ளத்தைக் கடந்து இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் ஒருவர் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டார். அதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் அவரைக் காப்பாற்றினர்.
இதனையடுத்து அந்தச் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. நந்தி, கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப் பெருக்கால், தரைப்பாலங்கள் மூழ்கிய நிலையில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாகப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
கன மழையின் வெள்ளத்தால் தரைப்பாலங்கள் மூழ்கிய நிலையில் சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், பெரும்பாலான பகுதிகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும், கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் அதிகரித்துவருவதால், கரையோர கிராம மக்கள் நீர்ப்பிடிப்புப் பகுதிகளுக்குப் பார்வையிடவோ, குளிக்கவோ செல்ல வேண்டாம் என்று பள்ளிப்பட்டு வட்டாட்சியர் சரவணன் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: Farm Laws: வேளாண் சட்டங்களை திரும்பப் பெற மத்திய அரசு முடிவு