திருவள்ளூர்: செல்போன் பிரச்னைக்காக தலையில் கல்லைப்போட்டு இளைஞர் ஒருவர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிதம்பரத்தைச்சேர்ந்த சந்தோஷ் குமார்(28) என்பவர் பூந்தமல்லி அடுத்த குண்டுமேடு பகுதியில், தனது உறவினர் வீட்டில் தங்கி இருந்த நிலையில், நேற்று (அக்.4) சந்தோஷ் குமார் அப்பகுதியைச்சேர்ந்த அவரது நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்ததாகத்தெரிகிறது.
அப்போது அவருக்கும் அவரது நண்பர் கௌதம் என்பவருக்கும் இடையே நடந்த மோதலில் கௌதமின் செல்போனை சந்தோஷ்குமார் பறித்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
தொடர்ந்து தனது செல்போனை சந்தோஷ்குமாரிடம் கேட்டுச்சென்ற கௌதமின் தாயாரை அவர், அவதூறாகப் பேசியதாகத் தெரிகிறது. இதை அறிந்து ஆத்திரமடைந்த கௌதம், அவரின் சகோதரர் கருப்பு முத்து, நண்பர் வெள்ளை முத்து ஆகியோருடன் சேர்ந்து கௌதமிடத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதைத்தொடர்ந்து, ஒருவருக்கொருவர் தாக்கிக்கொண்டனர்.
ஆத்திரத்தில் இருந்த கௌதம் உள்பட 3 பேரும் சேர்ந்து சந்தோஷ்குமாரை தாக்கி கீழே தள்ளியதோடு, அவரது தலையில் கல்லைப்போட்டு கொலை செய்துவிட்டு தப்பி ஓடினர். இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த வெள்ளவேடு போலீசார் விரைந்து வந்து சந்தோஷ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை தொடர்பாக கௌதம், சகோதரர் கருப்பு முத்து, நண்பர் வெள்ளை முத்து ஆகியோரை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பூண்டு மூட்டைகளுக்குக்கீழ் பதுக்கி வைத்திருந்த 1.15 டன் குட்கா பறிமுதல்; 5 பேர் கைது