திருவள்ளூர்: திருப்பாச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் வீரா (18). இவர் தனியார் தொழில் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். மேலும் இந்த இளைஞர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தொடர்ந்து வீடியோ வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் நேரலையில் கஞ்சா புகைத்து, கையில் பட்டா கத்தியுடன், அரை நிர்வானமாக பாடலுக்கு நடனம் ஆடியும், ஆபாசமாக பேசியும் வீடியோ வெளியிட்டுள்ளார். அதைத் தொடர்ந்து அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. மேலும் அந்த வீடியோ தொடர்பாக பலரது தரப்பில் கண்டனம் தெரிவித்து புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் திருப்பாச்சூர் பகுதியில் இளைஞர் வசிக்கும் பகுதியில் போலீசார் விசாரித்து வந்துள்ளனர். அப்போது அதைக் கண்ட இளைஞர் தன்னைத் தான் தேடுகிறார்கள் என சுதாரித்துக் கொண்டு தப்பியோட முயற்சி செய்துள்ளார். அப்போது அந்த நபரை மடக்கி பிடித்த போலீசார் அவரை சோதனை செய்தனர். அந்த சோதனையில் அவரது சட்டை பாக்கெட்டில் கஞ்சா இருப்பதை தெரியவந்தது.
அதன் பின்னர் அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 40 கிராம் கஞ்சா, கத்தி, செல்போன் போன்றவற்றை பறிமுதல் செய்தனர். அதன் பின்னர் அவரை திருவள்ளுர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மத்திய புழல் சிறையில் அடைத்தனர். தற்போது இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.