கொலு வைக்க ஆடம்பர வீடும், பணமும் தேவையில்லை...எளிமையாக கொலு வைப்பது எப்படி?

author img

By

Published : Sep 24, 2022, 10:56 AM IST

ஜ்

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி திருவிழா வரும் 26ம் தேதி தொடங்கவுள்ளது. ஆடம்பர வீடும் தேவையில்லை...பணமும் தேவையில்லை; எளிமையாக நவராத்திரி கொலு வைப்பது எப்படி ? அது குறித்த செய்தித்தொகுப்பை காணலாம் .

திருநெல்வேலி: இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு நவராத்திரி திருவிழா வரும் (செப்.26) ஆம் தேதி தொடங்க இருக்கின்றது.

அம்மன் ஒன்பது நாட்கள் தவமிருந்து மகிஷாசூரனை வதம் செய்த நாளை தான் இந்துக்கள் நவராத்திரி திருவிழாவாக கொண்டாடுகிறார்கள். கர்நாடகா மாநிலம் மைசூரில் கொண்டாடப்படும் நவராத்திரி திருவிழா உலக புகழ் பெற்றது. அதற்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் நவராத்திரி விழா மிகக் கோலாகலமாக கொண்டாடப்படும்.

நவராத்திரி விழாவின் முக்கிய அம்சம் கொலு பொம்மை வைப்பது தான். அமாவாசை தினத்தில் பூஜை செய்து விட்டு, மறுநாள் முதல் தங்கள் வீடுகளில் பொதுமக்கள் கொலு வைப்பது வழக்கம். எனவே, தற்போது கடைவீதிகளில் கொலு பொம்மை விற்பனை களைகட்டியுள்ளது. இருப்பினும் தற்போது வரை கொலு வைப்பது என்றால் வசதி படைத்தவர்களும் ஆடம்பரமான வீடு இருப்பவர்களும் தான் வைக்க முடியும் என பலர் கருதி வருகின்றனர்.

மேலும், ஆயிரக்கணக்கில் பணம் செலவு செய்து அதிக எண்ணிக்கையில் பொம்மைகள் வாங்கினால் தான் கொலு வைக்க முடியுமென பலரும் எண்ணி வருகின்றனர். ஆனால், கொலு வைப்பதற்கு ஆடம்பர வீடோ வசதியோ தேவையில்லை. மிக எளிமையாக தங்கள் வீடுகளில் வெறும் மூன்று பொம்மைகளை மட்டும் வைத்து கொலு வைக்கலாம் என்று நெல்லையைச் சேர்ந்த கொலு மாரியப்பன் விளக்கம் அளிக்கிறார்.

நெல்லை தியாகராஜநகரை சேர்ந்த மாரியப்பன் அரசு வேளாண்துறையில் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 47 ஆண்டுகளாக தனது வீட்டில் கொலு பொம்மை வைத்து வழிபடுவதால் கொலு மாரியப்பன் என இவரை அழைக்கின்றனர்.

நெல்லையை சேர்ந்த கொலு மாரியப்பன் குடும்பத்தினர்...

கொலு வைப்பதில் மாரியப்பன் பல விருதுகளையும் பெற்றுள்ளார். எளிமையாக கொலு வைப்பது எப்படி என்று மாரியப்பன் நம்மிடம் கூறும் போது, "நவராத்திரி தினங்களில் மட்டும் தான் அம்மன் நமது வீட்டிற்கு வந்து அருள் வழங்குகிறார் எனவே, புதிதாக கொலு வைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், கொலு படிகள் மட்டும் வாங்கி லட்சுமி, பிள்ளையார், சரஸ்வதி ஆகிய மூன்று பொம்மைகளை மட்டுமே வைத்து வழிபட்டால் போதும்.

47 ஆண்டுகளுக்கு முன்னர் நாங்கள் வெறும் மூன்று பொம்மைகளை மட்டும் வைத்து தான் கொலு வைத்தோம். தற்போது 47வது ஆண்டாக 9 அறைகளில் வித விதமாக 5000 கொலு பொம்மைகள் வைத்துள்ளோம். கொலு நேரத்தில் எங்கள் வீட்டிற்கு இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் என அனைத்து சமுதாய மக்களும் வருவார்கள்.

கொலு வைப்பதால் நமது வீடு புத்துணர்ச்சி பெறும். ஒவ்வொரு ஆண்டும், அந்தந்த ஆண்டுகளில் சிறப்பு பெறும் விஷயங்களை பொம்மையாக வைப்போம். அந்த வகையில் இந்த ஆண்டு சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற உலக செஸ் போட்டியில் பரதநாட்டியத்தை உலகம் முழுவதும் இருந்து வந்திருந்தவர்கள் கண்டு ரசித்தார்கள்.

எனவே, நவரசத்தையும் தரக்கூடிய பரதநாட்டிய பொம்மைகளை வைத்துள்ளோம். ஒவ்வொரு ஆண்டும் ஒரு மாதத்திற்கு முன்பே கொலு வைக்கும் பணிகளில் ஈடுபடுவோம். இவ்வளவு பொம்மைகள் தான் வைக்க வேண்டும் என்று கணக்கு கிடையாது. வெறும் மூன்று பொம்மைகளை வைத்து வழிபட்டாலே போதும்.

பெரிய பெரிய வீடுகள் தான் வேண்டும் என்று இல்லை, சின்ன வீடுகளில் கூட எளிமையான முறையில் கொலு வைத்து வழிபடலாம். கொலு வைக்கும் நடைமுறை என்று பார்த்தால் அமாவாசை தினத்தன்று மாலை வீட்டில் பூஜை செய்துவிட்டு மறு நாளில் இருந்து 9 நாட்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பூஜை செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும், பொம்மைகள் பேசுமா? என்ற கேள்விகு மாரியப்பனின் தாய் மரகதம் பதில் அளித்தார். "நாங்கள் பாரம்பரியமும் ஆன்மீகமும் சார்ந்து தான் கொலு வைக்கிறோம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான பூஜை செய்கிறோம். முதல் மூன்று நாட்கள் துர்க்கை பூஜையும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி பூஜையும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி பூஜையும் செய்கிறோம்.

பொம்மையை வெளியே எடுத்து வைக்கும் போதும் மந்திரம் சொல்ல வேண்டும். அதேபோல் பூஜை முடிந்த பிறகு பொம்மையை உள்ளே எடுத்து வைக்கும் போதும் மந்திரம் சொல்ல வேண்டும். பொம்மைகள் பேசும், ஒவ்வொரு பொம்மையும் தங்களுக்குரிய பாஷையில் இந்த ஆண்டு நாம் நல்ல முறையில் வெளியே வந்து விட்டு உள்ளே சென்று விட்டோம் என்று பேசிக்கொள்ளும்" என மரகதம் தெரிவித்தார்.

பின், மாரியப்பனின் மகள் ஸ்வேதா கூறும் போது, ஒவ்வொரு ஆண்டும் நாங்கள் புது புது பொம்மைகளை கொலுவில் வைக்கிறோம். அந்த வகையில் இந்த ஆண்டு சுருட்டள்ளி சிவன் பொம்மையை வைத்துள்ளோம். இந்தியாவிலேயே ஆந்திராவில் உள்ள நாகலாபுரத்தில் மட்டும்தான் சிவன் சைனா கோலத்தில் அம்பாள் மடியில் சாய்ந்து படுத்திருப்பார். எனவே, அந்த பொம்மையை இந்த ஆண்டு அறிமுகப்படுத்தியுள்ளோம். ஒவ்வொரு நாளும் ஒன்பது விதமான கோலங்கள் மற்றும் 9 விதமான பிரசாதங்கள் வழங்குவோம்" என்று தெரிவித்தார்.

முக்கியமாக, 9 நாட்களைக் குறிக்கும் வகையில் 9 படிகளில் கொலு பொம்மை வைப்பது வழக்கம். இந்த ஒன்பது படிகளிலும் 9 விதமான பொம்மைகள் வைக்க வேண்டும் என்ற நடைமுறை உள்ளது. அதன்படி முதல் படியில் புல், செடி, கொடி போன்ற தாவர பொம்மைகளையும், இரண்டாவது படியில் இரண்டு அறிவுக் கொண்ட நத்தை, சங்கு போன்றவைகளையும், மூன்றாவது படியில் மூன்று அறிவு கொண்ட கரையான், எறும்பு போன்ற பொம்மைகளும் இருக்க வேண்டும்.

நான்காவது படியில் நான்கு அறிவு கொண்ட நண்டு, வண்டு, போன்ற பொம்மைகளும், ஐந்தாவது படியில் ஐந்தறிவு கொண்ட நாற்கால் விலங்குகள் பறவை போன்ற பொம்மைகளும், ஆறாவது படியில் ஆறு அறிவு கொண்ட உயர்ந்த மனிதர்களும் இருக்கும்.

ஏழாவது படியில் மனிதனுக்கு மேற்பட்ட முனிவர்கள், மகான்கள், எட்டாவது படியில் தேவர்கள், நாயன்மார்கள், ஆழ்வார்கள், பஞ்சபூத தெய்வங்கள் மற்றும் கடைசியாக ஒன்பதாவது படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன், மும்மூர்த்திகள், அவர்தம் தேவியான சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகியோருடன் இருக்க வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: பழனி அடிவாரத்தில் செயல்படாத சிசிடிவி கேமராக்கள் - பர்ஸ் தொலைத்த ராணுவ வீரரின் பரிதாப வீடியோ..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.