ETV Bharat / state

மாணவனை அடித்த ஆசிரியரை பொதுமக்கள் செருப்பால் அடித்து துவம்சம் செய்ததால் பரபரப்பு!

author img

By

Published : Aug 8, 2023, 9:21 PM IST

மாணவனை அடித்த ஆசிரியரை பொதுமக்கள் செருப்பால் அடித்து துவம்சம் செய்தனர்..!
மாணவனை அடித்த ஆசிரியரை பொதுமக்கள் செருப்பால் அடித்து துவம்சம் செய்தனர்..!

கும்மிடிப்பூண்டி அருகே மாணவனை அடித்து காயப்படுத்திய அரசுப் பள்ளி தற்காலிக ஆசிரியரை உறவினர்கள் சேர்ந்து செருப்பால் அடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாணவனை அடித்த ஆசிரியரை பொதுமக்கள் செருப்பால் அடித்து துவம்சம் செய்ததால் பரபரப்பு!

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அடுத்த பூவலம்பேடு திடீர் நகரைச் சேர்ந்த சுரேஷ்பாபு - செவ்வந்தி தம்பதியரின் மகன் ஹரிஹரன். இவர் குருவராஜகண்டிகை பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வருகின்றார். இந்நிலையில் நேற்று மதியம் சுமார் 3 மணி அளவில் அப்பள்ளியில் பணிபுரியும் தற்காலிக ஆசிரியர் மோகன்பாபு என்பவர், மாணவன் ஹரிஹரனை பிரம்பால் அடித்துள்ளார்.

அதில் மாணவன் ஹரிஹரனுக்கு கைகள், கால்கள் உள்ளிட்டப் பகுதிகளில் அடிபட்டு வீக்கம் ஏற்பட்டுள்ளது. ஆனால், பள்ளி நிர்வாகம் மாணவனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமலும், வீட்டிற்கும் அனுப்பாமலும் இரவு எட்டு மணி வரை பள்ளியில் வைத்து, ஐஸ் கட்டியால் ஒத்தடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

மேலும் மாணவனிடம், சம்பவம் குறித்து, வீட்டில் சொன்னால் பள்ளியை விட்டு நிறுத்தி விடுவதாக மிரட்டியதாகவும் தெரியவந்துள்ளது. இதனால் மாணவன் பெற்றோர்களிடம் இரவு தெரிவிக்காத நிலையில் காலையில் கை, கால் வீங்கியதைக் கண்ட பெற்றோர்கள் மாணவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துள்ளனர்.

இதையும் படிங்க: 'ஜெயிலர்' சினிமா பார்க்க கூடுதல் டிக்கெட் கேட்டு தியேட்டர் மேலாளரை தாக்கிய ரஜினி ரசிகர்கள்!

அதன் பின்னர் பள்ளியில் இது தொடர்பாக விசாரிக்க வரும்போது, விவரம் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து சிறுவனின் உறவினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பள்ளியில் கூடியதால், பள்ளி வளாகத்தில் பரபரப்பான சூழல் நிலவியது. இதனையடுத்து தலைமையாசிரியர், மாணவன் ஹரிஹரனை அடித்து காயப்படுத்திய தற்காலிக ஆசிரியர் மோகன் பாபுவை அழைத்து நடந்தவற்றைக் கேட்டு விசாரித்துள்ளார்.

இந்நிலையில் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திடீரென தற்காலிக ஆசிரியர் மோகன் பாபுவை செருப்பால் அடித்து தாக்குதலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் ஆய்வாளர் வடிவேல் முருகன் பொதுமக்களின் தாக்குதலுக்கு ஆளான தற்காலிக ஆசிரியர் மோகன் பாபுவை மீட்டார்.

தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை மேற்கொண்டு, மாணவனை தாக்கிய ஆசிரியர் மீது உடனடி நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்தில் பாதிக்கப்பட்ட சிறுவன் ஹரிஹரனை தாயார் செவ்வந்தி வாகனத்திலும், பொதுமக்களால் தாக்கப்பட்ட தற்காலிக ஆசிரியர் மோகன்பாபு 108 ஆம்புலன்ஸ் மூலமும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இதையும் படிங்க: புதுச்சேரி முதலமைச்சரின் பிறந்தநாள் விளம்பர பேனர் சரிந்து விழுந்து 3 பேர் காயம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.