கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக சென்னை கோயம்பேடு சந்தைப் பகுதியிலிருந்து பழக்கடைகளைத் தனியாகப் பிரித்து தற்காலிகமாக திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் பேருந்து நிலையத்தில் கடைகள் அமைத்து விற்பனை செய்யப்பட்டுவருகிறது.
கடந்த ஐந்து மாதங்களாக செயல்பட்டுவரும் தற்காலிக பழச்சந்தை தற்போது ஆயுத பூஜை பண்டிகையில் எதிர்பார்த்த வியாபாரம் இல்லையென வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், "எதிர்பார்த்த அளவுக்கு மக்கள் பழங்களை வாங்க சந்தைக்கு வர முடியாமல் வெளியிலேயே பழங்களை வாங்கிச் செல்கின்றனர். இதனால், சில கடைகளில் இருக்கும் பழங்கள் அழுகும் நிலை ஏற்படுகிறது.
ஒரு கிலோ ஆப்பிள் 50 முதல் 100 ரூபாய்க்கும், எலுமிச்சம்பழம் 10 ரூபாய் முதல் 30 வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது. வாழைத்தார் 50 முதல் 100 ரூபாய்க்கும், சாத்துக்குடி ஒரு மூட்டை 900 ரூபாய்க்கும் என குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டாலும் எதிர்பார்த்த அளவுக்கு வாங்குவதற்கு ஆள்கள் வருவதில்லை.
எங்களுக்கு கோயம்பேடு சந்தைதான் வியாபாரத்திற்கு உகந்தது. ஆனால், தற்போது ஆயுத பூஜை பண்டிகை கொண்டாடப்பட்டுவந்தாலும் மக்கள் வராததால் எங்களுக்கு மிகுந்த வேதனையளிக்கிறது" எனத் தெரிவித்தனர்.