ETV Bharat / state

சீமானுக்கு எதிராக வாக்குமூலம் அளித்த விஜயலட்சுமி!- நீதிபதி முன்னிலையில் ஆஜர்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 1, 2023, 6:09 PM IST

Updated : Sep 2, 2023, 7:10 AM IST

சீமானுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு
சீமானுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, நடிகை விஜயலட்சுமி புகார் அளிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த வழக்கு திருவள்ளூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிபதி பவித்ரா முன்னிலையில் நடிகை விஜயலட்சுமியிடம் வாக்குமூலம் பெறப்பட்டது.

திருவள்ளூர்: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி, தன்னை திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டார் என காவல் துறையில் புகார் அளித்திருந்த நிலையில், இன்று இந்த வழக்கு திருவள்ளூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மேலும் நீதிபதி பவித்ரா முன்னிலையில் நடிகை விஜயலட்சுமியிடம் வாக்குமூலம் பெறபட்டது.

கடந்த 2011 ஆம் ஆண்டு சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில், நடிகை விஜயலட்சுமி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றியதாக புகார் ஒன்றை அளித்தார். மேலும் அந்த புகாரில், சீமான் மோசடி வழக்கில் ஈடுபட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் இந்த வழக்கில் அவர் மீது விரைவில் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விஜயலட்சுமி எழுதிக் கொடுத்ததாகக் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இது குறித்து நேற்று நடைபெற்ற விசாரணையில், திருவள்ளூர் ஒருகிணைந்த நீதிமன்றத்தில் நடிகை விஜயலட்சுமி விசாரணைக்காக ஆஜராகினார்.

சென்னை, ராமாபுரம் காவல் நிலையத்தில் தொடர்ந்து 8 மணி நேரத்திற்கும் மேலாக நடிகை விஜயலட்சுமியிடம் போலீசார் விசாரணை செய்தனர். காவல் நிலையத்தில் நடைபெற்ற விசாரணையில் நடிகை விஜயலட்சுமியிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: சீமானுக்கு எதிரான புகார் தொடர்பாக நடிகை விஜயலட்சுமியிடம் துணை ஆணையர் விசாரணை!

இதனைத் தொடர்ந்து, விசாரணையின் ஒரு பகுதியாக காவல் துணை ஆணையர் உமையாள், நடிகை விஜயலட்சுமியிடம் பல முக்கியமான கேள்விகளை எழுப்பியுள்ளார். குறிப்பாக, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நடிகை விஜயலட்சுமியை சித்திரவதை செய்தது, கரு கலைத்தது, மிரட்டியது உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து விரிவாக விசாரணை நடத்தப்பட்டது.

இந்த விசாரணையின் போது, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக பல விவரங்களை போலீசார் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து இந்த வழக்கு திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நீதிபதி பவித்ரா முன்பு இன்று(செப்.1) விசாரணைக்கு வந்தது.

இதனைத் தொடர்ந்து, காவல் துறையின் பலத்த பாதுகாப்புடன் இன்று(செப்.01) காலை செங்கல்பட்டில் இருந்து திருவள்ளூர் மாவட்டம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மகிலா நீதிமன்றத்தில் நடிகை விஜயலட்சுமி ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர், நீதிமன்றத்திற்குள் அழைத்துச் செல்லப்பட்ட நடிகை விஜயலட்சுமியிடம் இருந்து நீதிபதி பவித்ரா முன்னிலையில் வாக்குமூலம் பெறப்பட்டது.

திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தின் நடுவர் பவித்ரா முன்பாக ஆஜரான நடிகை விஜயலட்சுமி, இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக 8 பக்கங்கள் அளவில் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், சீமான் உடன் திருமணம் நடந்ததற்கான புகைப்படம் ஹோட்டலில் தங்கியதற்கான வீடியோ, வங்கி பணவர்த்தனை விவரம் ஆகியவை முன்னதாக கோயம்பேடு துணை ஆணையர் உமையாளிடம் அளித்ததாகத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர், வழக்கை ஒத்தி வைத்து மீண்டும் ஆஜராவதற்கான தேதிகள் அறிவிக்கப்படும் என உத்தரவிட்டார் நீதிபதி. வாக்குமூலத்தின் அடிப்படையில் சீமான் கைது செய்யப்படுவாரா இல்லையா என்பது குறித்து அடுத்த அமர்விலே தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து பலத்த பாதுகாப்புடன் காவல் துறையினர் நடிகை விஜயலட்சுமியை மீண்டும் அழைத்துச் சென்றனர்.

இதையும் படிங்க: அடிப்படை வசதி இல்லாத அரசினர் ஆதிதிராவிடர் நலப்பள்ளி.. அதிகாரிகளை கண்டித்த விசிக எம்எல்ஏ!

Last Updated :Sep 2, 2023, 7:10 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.