ETV Bharat / state

ஆடம்பர வாழ்க்கையை காட்டி ஆசை வார்த்தை... இன்ஸ்டாகிராம் மன்மதனை கையும் களவுமாக பிடித்த இளைஞர்! கம்பி எண்ணும் அவலம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 3, 2023, 12:34 PM IST

போலீசார் தீவிர விசாரணை
இன்ஸ்ட்ராகிராமில் பல பெண்களை ஏமாற்றிய இளைஞர் கைது

இன்ஸ்டாகிராம் மூலமாக, ஆடம்பர புகைப்படங்களை காண்பிடித்து இளம் பெண்களிடம் அத்துமீறிய இளைஞரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருநெல்வேலி: இன்ஸ்டாகிராமில், டிப் டாப் உடை, வெளிநாட்டு பயணம், ஆடம்பர கார் என சினிமா ஸ்டாருக்கு இணையாக புகைப்படங்களை காட்டி, பத்துக்கும் மேற்பட்ட இளம் பெண்களிடம் பழகி, அவர்களின் அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரப்பிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). சொந்தமாக தொழில் செய்து வரும் இவர் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த 28 வயதான பெண்ணுடன், குடும்பத்தார் முன்னிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கயத்தாரில் வெகு விமர்சையாக திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், பிரசவத்திற்காக தாய் வீட்டுக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு சென்ற சுரேஷின் மனைவி. ஆறு மாதங்கள் கழித்து மீண்டும் தூத்துக்குடியில் உள்ள கணவரின் வீட்டிற்கு வந்துள்ளார். அதன் பிறகு மனைவியின் செயல்பாடுகளில் பல்வேறு மாற்றங்கள் இருந்ததாகவும், செல்போன் பேசுவது, இன்ஸ்டாகிராமில் சாட் செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால், அதிருப்தி அடைந்த சுரேஷ், மனைவியிடம் அதுகுறித்து கேட்டுள்ளார். இதனால் கணவர், மனைவி இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, மனைவி இல்லாத நேரத்தில், அவருடைய செல்போனை எடுத்து பார்த்தபோது, இன்ஸ்டாகிராமில் சுரேஷின் மனைவி Mass sundhar 17 என்ற ஐடியில் அவ்வபோது பேசி வந்தது தெரியவந்தது.

அந்த ஐடியில் பேசியது யார் என்று மனைவியிடம் கேட்டதன் காரணமாக, இருவருக்கும் மீண்டும் சண்டை ஏற்பட்ட நிலையில், மனைவி அவருடைய தாய் வீட்டிற்குச் சென்றுள்ளார். அதனைத்தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம் விவகாரத்து கேட்டு திருநெல்வேலி நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணையில் இருந்து வரும் நிலையில், நன்றாக சென்று கொண்டிருந்த தனது வாழ்க்கையை நாசமாக்கிய அந்த மர்ம நபரின் பின்னணி குறித்து அறிய சுரேஷ் எண்ணியுள்ளார். இதனால், இன்ஸ்டாகிராமில் nandhini.K112 என்ற பெயரில் போலியாக ஒரு ஐடி உருவாக்கி, தனது மனைவி பழகி வரும் mass sundar 17 என்ற ஐடிக்கு சுரேஷ் நட்பு அழைப்பு விடுத்துள்ளார்.

இதனையடுத்து, நட்பு அழைப்பை ஏற்ற மாஸ் சுந்தர், தொடர்ந்து பேசி வந்த நிலையில், தங்களுடைய ஆபாச படங்களை அனுப்ப வேண்டும் என்று போலி ஐடி மூலம் சுரேஷை கட்டாயப்படுத்தி உள்ளார். முன்னதாக, தன்னுடைய ஐடியில் ஏற்கனவே பல பெண்கள் அனுப்பிய புகைப்படங்கள், ஆபாச படங்களை போலி ஐடியான சுரேஷுக்கு அனுப்பிய நிலையில், அதில் தனது மனைவி அந்த நபருடன் இருக்கும் புகைப்படம் இருப்பதை கண்டு சுரேஷ் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினார்.

இது தொடர்பாக, திருநெல்வேலி மாநகர காவல் ஆணையரிடம் சுரேஷ் புகார் மனு அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் திருநெல்வேலி மாநகர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில், மர்ம நபர் மீது ஆறு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த சைபர் கிரைம் காவல்துறையினர், இன்ஸ்டாகிராம் ஐடியின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சுந்தர் என்ற இளைஞர் தான் சுரேஷ் மனைவி உள்பட பல பெண்களை தனது வலையில் வீழ்த்தி அவர்களின் ஆபாச புகைப்படங்களை காட்டி மிரட்டி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து,போலீசார் சுந்தரை கைது செய்து, அவருடைய செல்போனை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து காவல்துறை நடத்திய விசாரணையில், அவர் ஐடி ஊழியர் போன்று டிக் டாப் உடையுடன், வெளிநாடு வாழ்க்கை, சொகுசு கார் என பல்வேறு புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு திருமணமான மற்றும் திருமணமாகாத இளம் பெண்களை ஏமாற்றி, அவர் ஆசைக்கு அனைவரையும் பயன்படுத்தி இருப்பதும், இதுவரை 10க்கும் மேற்பட்ட பெண்களின் வாழ்க்கையை நாசபடுத்தியதும் தெரிய வந்தது.

இந்நிலையில், சுந்தரை காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இன்ஸ்டாகிராம் மோகத்தில் மூழ்கிய இளம் பெண்களும், குடும்ப பெண்களும் தங்கள் எதிர்காலத்தை நினைத்துப் பார்க்காமல் ஒரு நிமிடம் எடுக்கும் இந்த முடிவு அவர்களின் வாழ்க்கையை புரட்டி போட்டு விடும் என்பதற்கு சான்றாக இந்த நிகழ்வு அமைந்துள்ளது.

இதையும் படிங்க: தூத்துக்குடியில் காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதி வெட்டிக்கொலை.. திருமணமான 3வது நாளில் நிகழ்ந்த கொடூர சம்பவம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.