ETV Bharat / state

புகழ்பெற்ற நெல்லை உச்சிஷ்ட கணபதி கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 18, 2023, 5:28 PM IST

நெல்லை உச்சிஷ்ட கணபதி கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா
நெல்லை உச்சிஷ்ட கணபதி கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா

Vinayagar Chaturthi Festival 2023: மணிமூர்த்தீஸ்வரத்தில் உள்ள ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா அபிஷேக ஆராதனை மற்றும் தீர்த்தவாரியுடன் சிறப்பாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

திருநெல்வேலி: மணிமூர்த்தீஸ்வரத்தில் உள்ள ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா அபிஷேக ஆராதனை மற்றும் தீர்த்தவாரியுடன் சிறப்பாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

நெல்லை உச்சிஷ்ட கணபதி கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா

திருநெல்வேலி மாவட்டம் தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள மணிமூர்த்தீஸ்வரத்தில் ஸ்ரீ மூர்த்தி விநாயகா் என்ற உச்சிஷ்ட விநாயகர் ஆலயம் விநாயகருக்கென அமைந்துள்ளது. ஆசியாவிலேயே பெரிய ராஜகோபுரத்தை கொண்ட கோயிலும் இது தான். ராஜ கோபுரத்துடன் எட்டுநிலை மண்டபங்கள், மூன்று பிரகாரங்கள், கொடிமரத்துடன் 1000 ஆண்டுகள் பழமையான கோயிலாகும். இங்கு உச்சிஷ்ட கணபதி நான்கு கரங்களுடன் யோகநிலையில் இடது மடியில் ஸ்ரீநீலவாணி அம்பாளுடன் அருள் பாலிக்கிறார்.

பிரகாரத்தில் ஸ்வர்ண ஹரித்ரா குஷி விஜய அர்க குரு சந்தானலஷ்மி ஹேரம்ப சக்தி சங்கடஹர துர்கா ருணஹரண ஸ்ரீவல்லபை சித்தி வீர ஸர்வசக்தி கணபதி என 16 கணபதிகள் அருள்பாலிக்கின்றனர். மேலும் நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்பாள் பதஞ்சலி வியாக்ரபாதர் ஈசான்யத்தில் சொர்ண ஆகர்ஷண பைரவர் என தனித்தனி சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர். இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா 10 தினங்கள் சிறப்பாக நடைபெறும்.

அதனையொட்டி இந்த ஆண்டுக்கான விழா, கடந்த கடந்த 9 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலையில் யாகசாலை பூஜைகள் மற்றும் அபிஷேக தீபாராதனையும், மாலையில் விஷேச அலங்கார தீபாராதனையும் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து மூஷிக வாகனத்தில் திருவீதியுலாவும் தீபாராதனைகளும் நடைபெற்றன.

விநாயகர் சதுர்த்தி தினமான 10 திருநாளான இன்று அதிகாலையில் யாகசாலை பூஜை ஆரம்பிக்கப்பட்டு, விநாயகர் மூலமந்திர ஹோமம் மகா பூர்ணாஹுதி நடைபெற்றது. இதனை தொடர்ந்து மூலஸ்தானத்தில் மாபொடி, மஞ்சள் வாசனை பொடி, பால், தயிர் பஞ்சாமிர்தம், தேன், இளநீர், வீபூதி, சந்தனம் என 16 வகையான அபிஷேக பொருட்களால் ஸ்ரீமூர்த்தி விநாயகருக்கு அபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து யாகசாலையில் பூஜீக்கப்பட்ட கும்பமானது மேளதாளங்களுடன் எடுத்துவரப்பட்டு மகாஅபிஷேகம் நடைபெற்றது. பின்னர் விநாயகர் சதுர்த்தி சிறப்பு அலங்காரமாக தங்கமுலாம் பூசப்பட்ட கவசம் மலர் மாலைகள் அணிவித்து மகா தீபாராதனையும் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து பக்தர்கள் ஸ்ரீஉச்சிஷ்ட கணபதியை வழிபட்டனர். நண்பகலில் தாமிரபரணி நதிக்கரையில் உற்சவர் அஸ்திரதேவருடன் எழுந்தருள விநாயகர்சதுர்த்தி தீா்த்தவாாியுடன் திருவிழா நிறைவடைகின்றது. விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் மற்றும் உபயதாரா்கள் செய்து வருகின்றனா்.

இதையும் படிங்க: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை வழங்கிய இஸ்லாமியர்கள் - கிருஷ்ணகிரியில் நெகிழ்ச்சி !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.