ETV Bharat / state

பறவைங்களும் எங்க வீட்டு பிள்ளைங்தான்: ஆச்சரிய கிராமம் கூந்தன்குளம்!

author img

By

Published : Aug 23, 2021, 8:03 PM IST

koonthankulam birds sanctuary
koonthankulam birds sanctuary

இந்திய துணைக்கண்டம் தன்னுள் ஒளித்து வைத்திருக்கும் ஆச்சரியங்களில் ஒன்று, வனங்களை காட்டுயிர்களுடன் பகிர்ந்து வரும் ஆதிகுடிகளின் பண்பு. ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் காடுகளில் நிகழந்து வரும் இந்த மரபுவழி பண்பாட்டுக்கு, சமவெளியைச் சேர்ந்த நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என அறைகூவுகிறது திருநெல்வேலியிலுள்ள கூந்தன்குளம் கிராமம். இங்குள்ள மக்கள் நூற்றாண்டுகளாய் வலசை வரும் பறவைகளுடன் தங்களின் வாழ்விடத்தை பகிர்ந்து வருகின்றனர்.

திருநெல்வேலி: "பிரசவத்திற்காக பொறந்த வீட்டுக்கு வர்ற பிள்ளைங்க மாதிரி வருஷா வருஷம் எங்கள நம்பி இங்க குஞ்சு பொரிக்க வருதுங்க. உங்களுக்கு தான் அது வெளிநாட்டுப் பறவைங்க. எங்களுக்கு எப்பவும் அதுங்க எல்லாம் எங்க வீட்டுப் பிள்ளைங்க தான்" கூந்தன்குளம் என்னும் கிராம மக்களின் ஏகோபித்த குரல் இது!

நெல்லை மாவட்டத்திலிருந்து 35 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது கூந்தன்குளம் கிராமம். ஆண்டு தோறும் இங்கு ஆயிரக்கணக்கான வெளிநாட்டுப்பறவைகள் வலசையாக வந்து செல்கின்றன. அவைகளை தங்கள் வீட்டுப் பிள்ளைகளைப் போல பாவித்து வருகின்றனர் கிராமவாசிகள்.

இயற்கையான சரணாலயம்

கூந்தன்குளம், காடன்குளம் என இயற்கையாக அமைந்த நீர்பரப்பில், 129.33 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது கூந்தன் சரணாலயம். கடந்த 1994ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு கூந்தன்குளத்தை பறவைகள் சரணாலயமாக அறிவித்து பராமரித்து வருகிறது.

தங்களின் சொந்த தேசங்களில் வாழ வழியின்றி, தூர தேசத்திற்கு வலசை வரும் பறவைகள், இங்குள்ள குளங்கள், கிராமங்களில் இருக்கும் மரங்களில் கூடுகட்டி இனப்பெருக்கம் செய்கின்றன. கூந்தன்குளத்திற்கு பிரான்ஸ், ஆஸ்திரேலியா, நைஜீரியா, பிலிப்பைன்ஸ், ஜெர்மனி, சைபீரியா ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் இருந்து பறவைகள் வருகின்றன.

தை அமாவாசைக்கு ஊருக்கு வரும் பறவைங்க, கூடுகட்டி குஞ்சு பொரிச்சு, குஞ்சுங்க கொஞ்சம் வளர்ந்ததும், ஆடி அமாவாசைக்கு வெளிக்கெளம்பிருங்க. அதேமாதிரி நல்ல நாள்லதான் பறவைங்க கூடுகட்ட ஆரம்பிக்கும். அதுங்க வெறும் பறவைங்க இல்லை.ஞானபட்சி என பறவைகள் குறித்த தனது அனுபவத்தை விவரிக்கிறார் கிராமத்து பெரியவர் சுடலைமுத்து.

koonthankulam birds sanctuary

ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரையில் இங்கு பறவைகள் சீசன். இந்த காலநேரத்தில், பின்டைல், கிரிசன் காரிகனி, பிளமிங்கோ போன்ற வெளிநாட்டு பறைகளும் வெள்ளை அரிவாள் மூக்கன், பெலிகான் நீர்காகம், நாமக்கோழி, நீர் வாத்து, கூழைக்கடா, சாம்பல் நாரை போன்ற உள்நாட்டுப்பறவைகளும் வலசை வருகின்றன.

அதிர்ஷ்டம் கொண்டு வரும் பறவைகள்

"பறவைகள் இங்கு வருவதால் எங்களுக்கு சந்தோஷமே. எங்களைப் பொறுத்தவரை பறவைகள் வந்தால் தான் நல்லது என வாழ்ந்து வருகிறோம்" என்கிறார் பேச்சிமுத்து.

"பறவைங்க அதுங்களோட சொந்த வீடு மாதிரி, இங்கே எல்லா இடத்துக்கும் வந்து போகும். சீசன் டைம்ல யாரையும் குளத்துக்குள்ள இறங்க விடமாட்டோம். அரசாங்கமும் எங்களுக்கு உதவி செய்யுது. மணிமுத்தாறு அணையிலிருந்து கூடுதலாக தண்ணீர் திறந்து விட்டால் இன்னும் அதிமான பறவைகள வரும்" என்கிறார் கிராமத்தில் உணவகம் நடத்தி வரும் ஐஸ்ரிவேல்.

குளத்திலுள்ள மரங்களில் பறவைகள் கூடுகட்டுவதால், அவற்றின் எச்சங்கள் தண்ணீரில் விழுகின்றன. அந்த நீரை விவசாயத்திற்கு பயன்படுத்துவதால், பயிர்கள் செழித்து வளருவதாக கிராம விவசாயிகள் நம்புகின்றனர்; அவர்களின் நம்பிக்கை இதுவரை பொய்யாகியதும் இல்லை.

பறவைங்க எச்சத்தால துர்நாற்றம் அடிக்கத்தான் செய்யும். அப்போ கூட நாங்க அதுங்களுக்கு தொந்தரவு கொடுக்க மாட்டோம், விரட்டிவிட மாட்டோம். எங்க பயிருங்க நல்லா வளர பறவைங்க தான் உதவுது என்கிறார் கிராமத்து வாசியான தங்கலட்சுமி.

வலசை வரும் பறவைகளுக்காக கூந்தன்குளம் கிராமத்தினர் பல விசயங்களை விட்டுக் கொடுக்கின்றனர். இங்குள்ளவர்களின் தியாகத்தில் பிரதானமானது கிராமத்தில் நடக்கும் விழாக்கள், நிகழ்ச்சிகளில் யாரும் வெடிகள் வெடிப்பதில்லை. இதற்கு சிறிவர்கள் முதல் பெரியவர்கள் வரை யாரும் விதிவிலக்கில்லை. அதே போல பறவைகளுக்காக குளங்களில் மீன்களைப் பிடிப்பதில்லை, மற்றவர்களை மீன் பிடிக்க அனுமதிப்பதில்லை.

இயற்கைக்கு நாம் இடையூறு செய்யாமல் இருந்தால், இயற்கை நமக்கு வேண்டியதைத் தரும் என்பதற்கு நூற்றாண்டு கால சாட்சி கூந்தன்குளம் கிராமம்.

இதையும் படிங்க: ராமநாதபுரம் பறவைகள் சரணாலயங்களில் 30 விழுக்காடு பறவைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.