ETV Bharat / state

தமிழ்நாட்டில் ஆட்சி கலைப்பு பற்றி யோசித்து தான் பாக்கட்டுமே.. அமைச்சர் எல்.முருகனுக்கு உதயநிதி பதிலடி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 27, 2023, 7:01 PM IST

எல் முருகனுக்கு உதயநிதி காட்டமான பதில்
எல் முருகனுக்கு உதயநிதி காட்டமான பதில்

minister udhayanidhi: ஆளுநருக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ள நிலையிலும் தமிழ்நாடு அரசை கலைக்கும் யோசனை இல்லை என மத்திய அமைச்சர் எல் முருகன் கூறியதற்கு அமைச்சர் உதயநிதி ஆட்சி கலைப்பு பற்றி யோசித்து தான் பார்க்கட்டுமே என பதிலடி கொடுத்துள்ளார்.

மத்திய அமைச்சர் எல் முருகனுக்கு அமைச்சர் உதயநிதி பதிலடி

திருநெல்வேலி: நெல்லை மாவட்டத்தில் பல்வேறு அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காகத் தமிழ்நாடு இளைஞர் நலன் விளையாட்டுத்துறை மற்றும் சிறப்புத் திட்டங்கள் அமலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று இரவு வந்தார்.

இளைஞர் அணி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் நடைபெற்று வரும் பெரியார் பேருந்து நிலைய பணிகளைப் பார்வையிட்டார். கடந்த 2017ஆம் ஆண்டு இந்த பேருந்து நிலைய பணிகள் துவங்கிய நிலையில் 6 ஆண்டுகள் கடந்தும் பேருந்து நிலைய பணிகள் முழுமையாக நிறைவு பெறவில்லை.

இந்த நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு முக்கியத்துவம் பெற்றுள்ளது. தொடர்ந்து அமைச்சர் உதயநிதி செய்தியாளர்களிடம் பேசுகையில், ”நீதிமன்ற வழக்கு காரணமாகப் பேருந்து நிலைய கட்டிடப் பணிகளில் தாமதம் ஏற்பட்டது. தற்போது 90% பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், வரும் நவம்பர் 30ஆம் தேதிக்குள் முழுமையாக பணிகள் நிறைவு பெறும்.

டிசம்பர் மாதத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் காணொலி காட்சி மூலமாகப் பேருந்து நிலையத்தைத் திறந்து வைப்பார் என்று தெரிவித்தார். மேலும் நெல்லை கீழநத்தம் பகுதியில் பாழாகி வரும் சர்வதேச தரத்திலான நீச்சல் குளத்தை அமைச்சர் ஆய்வு செய்தார். அது குறித்த கேள்விக்கு 10 லட்சம் ரூபாய் நிதி புனரமைப்பு செய்வதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு நீச்சல் குளம் பயன்பாட்டிற்கு வரும் எனக் கூறினார்.

தொடர்ந்து, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஆட்சியில் உள்ள ஒன்பது ஆண்டுகளில் எந்த மாநில அரசையும் கலைத்ததில்லை. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போய் ஆளுநருக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ள நிலையிலும் தமிழ்நாடு அரசை கலைக்கும் யோசனை இல்லை என மத்திய அமைச்சர் எல் முருகன் பேட்டி அளித்திருந்தது குறித்த கேள்விக்கு, ஆட்சியைக் கலைப்பது குறித்து யோசித்துத் தான் பார்க்கட்டுமே என்று பதிலளித்தார்.

மேலும் மகளிர் உதவித்தொகை 1 கோடி 6 லட்சத்து 58 ஆயிரம் பேருக்கு வழங்கியுள்ளோம். வீடு வழங்கும் திட்டத்தில் வீடு இல்லாதவர்களுக்கு மட்டுமே வீடு வழங்கப்படும். இதனையடுத்து திருநெல்வேலி மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டத்தில் விவாதிக்க இருப்பதாகவும்” அமைச்சர் உதயநிதி தெரிவித்தார்

இதையும் படிங்க: நெல்லையில் உதயநிதி ஸ்டாலினின் விளம்பர பேனர்கள் திடீர் அகற்றம் - காரணம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.