மதப் பிரச்னையால் வைக்கப்பட்ட அறிவிப்பு பலகை : சமூக வலைதள சர்ச்சையால் அகற்ற முடிவு!

author img

By

Published : Sep 27, 2021, 10:53 PM IST

Updated : Sep 30, 2021, 6:28 AM IST

medical college  thirunelveli medical college  thirunelveli medical college board issue  thirunelveli news  thirunelveli latest news  திருநெல்வேலி செய்திகள்  சமூக வலைதளங்கள்  பதாகையால் ஏற்பட்ட சர்ச்சை  திருநெல்வேலி மத்துவக் கல்லூரி மருத்துவமனை  திருநெல்வேலி மத்துவக் கல்லூரி மருத்துவமனை பதாகை பிரச்சினை

திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் ஐந்து ஆண்டுகளாக வைக்கப்பட்டிருந்த அறிவிப்பு பலகையால் திடீரென சர்ச்சை ஏற்பட்டதையடுத்து அப்பலகை நீக்கப்படவுள்ளது.

திருநெல்வேலி: பாளையங்கோட்டை ஐகிரவுண்டு பகுதியில் அமைந்துள்ள திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நோயாளிகளிடம் மதப்பிரச்சாரம் செய்ய தடை விதித்து பல ஆண்டுகளாக அறிவிப்பு பலகை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.

அதில், இது மதச்சார்பற்ற மருத்துவமனை, இங்கு மத போதனைகள் தடைசெய்யப்பட்டுள்ளது. மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மதப் பிரச்சாரம் செய்பவர்கள் காவல்துறை வசம் ஒப்படைக்கப்படுவார்கள், இப்படிக்கு முதல்வர் என்று வாசகம் எழுதப்பட்டிருக்கும்.

பதாகையால் வெடித்த சர்ச்சை

இந்த அறிவிப்பு பலகையில் பொறிக்கப்பட்டிருந்த வார்த்தைகளால், சமூக வலைதளங்களில் பல சர்ச்சைகள் எழுந்துள்ளன. அதாவது இப்பலகை தற்போது தான் வைக்கப்பட்டுள்ளது என கிறிஸ்தவ அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைதளங்களில் விவாதித்துள்ளனர்.

மேலும், வழக்கறிஞர் சரவணன் டி பிரட்ரிக் என்பவர் தனது யூடியூப் பக்கத்தில் இதுதொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. இதே மருத்துவமனையில் இந்து கோயில் அமைந்துள்ளது. அதை உங்களால் எடுக்க முடியுமா. எனவே உடனடியாக இந்த பலகையை அகற்ற வேண்டும். இல்லாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்திருந்தார்.

அறிவிப்பு பலகையால் வெடித்த சர்ச்சை

இதற்கிடையில், இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரவிச்சந்திரனை தொடர்பு கொண்டு அந்த வாசகம் புதிதாக எழுதப்பட்டதா என விசாரித்துள்ளார். அதற்கு விளக்கம் அளித்த முதல்வர் ரவிச்சந்திரன், அந்த வாசகம் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டதுதான், வேண்டுமென்றால் எடுத்துவிடலாம் என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சமூக வலைதளங்களில் திடீர் சர்ச்சை ஏற்பட்டதை தொடர்ந்து, மதப்பிரச்சாரம் தொடர்பாக அந்த பலகையில் எழுதப்பட்டுள்ள வாசகங்களை அகற்ற மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்தது.

பதாகை நீக்கம்

இதுகுறித்து முதல்வர் ரவிச்சந்திரன் கூறியதாவது, “ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மனோகரா என்ற பெண் முதல்வராக இருந்தபோது ஏதோ சில மதப் பிரச்னை ஏற்பட்டதை தொடர்ந்து, அப்போது திருநெல்வேலி ஆட்சியராக இருந்த கருணாகரன் உத்தரவின்பேரில் இந்தப் பலகை வைக்கப்பட்டது.

இதில் எந்த உள்நோக்கமும் இல்லை. அந்த பலகை தற்போது துருப்பிடிக்கும் அளவுக்கு பழமையாகிவிட்டது. ஆனால், சிலர் தற்போது தேவையில்லாமல் இதை பெரிதுபடுத்துகின்றனர். அப்படிப் பார்த்தால் கரோனோ காலத்தில் அனைத்து மதத்தினரும் இங்கு நோயாளிகளுக்கு உணவு கொண்டு வந்து கொடுத்தார்கள்.

குறிப்பாக கிறிஸ்தவ பிஷப் சார்பில் கஞ்சி கொடுக்கப்பட்டது. அதேபோல் முஸ்லிம் அமைப்புகள் சார்பிலும் நோயாளிகளுக்கு பிரியாணி பார்சல் வழங்கப்பட்டது. எந்த பிரச்னையும் ஏற்படவில்லை. இதுவரை இந்த பலகை தொடர்பாக எங்களிடம் நேரடியாக யாரும் புகார் கொடுக்கவில்லை.

சுகாதாரத்துறை செயலாளர் மட்டும் என்னிடம் விசாரித்தார். திருநெல்வேலியில் தற்போது மீண்டும் கரோனோ தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. எனவே இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் அந்த பலகையில் உள்ள வாசகங்கள் அகற்றப்பட்டு, அதே இடத்தில் கரோனோ தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் எழுத நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஹைதராபாத் கனமழை: கழிவுநீர் ஓடையில் அடித்துச் செல்லப்பட்டவர் உடல் கண்டெடுப்பு!

Last Updated :Sep 30, 2021, 6:28 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.