ETV Bharat / state

பல் பிடுங்கிய விவகாரம்:2ஆம் கட்ட விசாரணையில் மூன்று பேர் ஆஜர்

author img

By

Published : Apr 18, 2023, 3:32 PM IST

நெல்லை பல் பிடுங்கிய விவகாரம்: 2ஆம் கட்ட விசாரணை இன்று நிறைவு!
நெல்லை பல் பிடுங்கிய விவகாரம்: 2ஆம் கட்ட விசாரணை இன்று நிறைவு!

நெல்லையில் விசாரணைக் கைதிகளின் பல்லை பிடுங்கிய விவகாரத்தில், பாதிக்கப்பட்ட மூன்று பேர் இன்று உயர்மட்ட விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி உள்ளனர்.

நெல்லையில் விசாரணை கைதிகளின் பல்லை பிடுங்கிய விவகாரத்தில், பாதிக்கப்பட்ட மூன்று பேர் இன்று உயர்மட்ட விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி உள்ளனர்

திருநெல்வேலி: அம்பாசமுத்திரம் சரக காவல் உதவி கண்காணிப்பாளராக இருந்த பல்வீர் சிங், விசாரணைக் கைதிகளின் பல்லை பிடுங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தில் மூத்த ஐஏஎஸ் அதிகாரி அமுதா, உயர்மட்ட விசாரணை மேற்கொண்டு வருகிறார். அம்பாசமுத்திரம் தாலுகா அலுவலகத்தில் வைத்து, விசாரணை அதிகாரி அமுதா நேற்று (ஏப்ரல் 17) தனது இரண்டாம் கட்ட விசாரணையைத் தொடங்கினார்.

ஏற்கனவே கடந்த வாரம் நடைபெற்ற முதல் கட்ட விசாரணையில், பாதிக்கப்பட்ட நபர்கள் ஒருவர் கூட ஆஜராகவில்லை. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற 2ஆம் கட்ட விசாரணையில், பாதிக்கப்பட்ட செல்லப்பா, இசக்கி முத்து, அருண் குமார், வேத நாராயணன், சுபாஷ், எம்.மாரியப்பன் மற்றும் இரண்டு சிறார்கள் உள்பட 10 பேர் ஆஜராகி இருந்தனர்.

நேற்று காலை 10 மணிக்குத் தொடங்கிய விசாரணை, இரவு 12 மணி வரை நீடித்தது. அப்போது, பாதிக்கப்பட்ட நபர்களை ஒவ்வொருவராக தனித்தனியாக அழைத்து, அவர்கள் பாதிக்கப்பட்டது குறித்து விரிவாகக் கேட்டறிந்தார்.

இதனால் விசாரணை இரவு வரை நீடித்தது. நேற்று ஏழு பேரை விசாரித்து முடித்த நிலையில், இரவு 12 மணிக்கு அதிகாரி அமுதா விசாரணையை முடித்துக் கொண்டார். இதனால் வேத நாராயணன், எம்.மாரியப்பன் மற்றும் சுபாஷ் ஆகிய 3 பேரிடம் மட்டும் நேற்று விசாரணை நடத்த முடியவில்லை. எனவே, அவர்களை இன்று விசாரணைக்கு ஆஜராகும்படி அதிகாரி அமுதா கூறி இருந்தார். அதன்படி, இன்று (ஏப்ரல் 18) இரண்டாம் கட்ட விசாரணையின் 2வது நாள் விசாரணை நடைபெற்றது.

சரியாக காலை 10.40 மணிக்கு விசாரணை அதிகாரி அமுதா, வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்தார். இதனைத் தொடர்ந்து, தற்போது எம்.மாரியப்பன், சுபாஷ் மற்றும் வேத நாராயணன் ஆகிய மூன்று பேரும், தங்கள் வழக்கறிஞர் மகாராஜன் தலைமையில் விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர். அவர்களிடம் அதிகாரி அமுதா, தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

மேலும், 2ஆம் கட்ட விசாரணை இன்றுடன் முடிவடைய உள்ளதால், இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் ஆஜராகலாம் எனக் கூறப்படுகிறது. இதனிடையே புகாருக்கு உள்ளான ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது நேற்று, நெல்லை மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர், நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்திருப்பதாக, நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன், நெல்லையில் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: கைதிகள் பல் பிடுங்கிய விவகாரம்.. 11 பேரிடம் நள்ளிரவு வரை விசாரணை நடத்திய அதிகாரி அமுதா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.