ETV Bharat / state

நோயை தீர்க்க வேண்டிய இடத்திலேயே நோய் உற்பத்தியா?.. சுகாதார நிலையத்தை சூழ்ந்துள்ள மழைநீரால் பொதுமக்கள் அவதி..

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 24, 2023, 4:47 PM IST

public suffering due to rain water surrounding in health center
சுகாதார நிலையத்தை சூழ்ந்துள்ள மழைநீரால் பொதுமக்கள் அவதி

Hospital Surrounded by water: நெல்லையில் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில் சுகாதார நிலையத்தை மழைநீர் சூழ்ந்துள்ளதால் கடும் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

சுகாதார நிலையத்தை சூழ்ந்துள்ள மழைநீரால் பொதுமக்கள் அவதி

திருநெல்வேலி: மக்களை அச்சுறுத்தும் வண்ணம் நெல்லையில் மர்ம காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. இந்த நிலையில், சுகாதாரத்தைப் பேணிக்காக்க வேண்டியது அவசியமான ஒன்று. ஆனால், சுகாதார நிலையத்தை மழைநீர் சூழ்ந்துள்ளதால், கடும் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்திருப்பதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி போன்ற தென் மாவட்டங்களிலும் கடந்த சில தினங்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது.

அந்த வகையில், நெல்லை மாவட்டத்தில் நேற்று முன்தினம் (நவ.22) இரவு முழுவதும் விடிய விடிய பலத்த மழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, களக்காடு, மூலைக்கரைப்பட்டி, மானூர் மற்றும் நெல்லை மாநகர பகுதிகளில் பெய்த கனமழையால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.

மேலும், சாலைகளிலும் ஆங்காங்கே தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மழை ஓய்ந்து ஒரு நாளாகியும் பல்வேறு இடங்களில் தண்ணீர் வடியாததால், தற்போது கடும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், நெல்லை சேரன்மகாதேவி அருகே கூனியூரில் சாலை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கிய மழை நீரை, மோட்டார் மூலம் உறிஞ்சி சாலையில் அலட்சியத்துடன் வெளியேற்றி வருகின்றனர்.

இந்த மழைநீர் அனைத்தும் அருகில் உள்ள சுகாதார நிலையம் மற்றும் ரேஷன் கடையை சூழ்ந்திருப்பதால், அங்கே கடும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பாக ரேஷன் கடையை சுற்றி மழை நீர் தேங்கிக் கிடப்பதால், பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர்.

மாற்றுத்திறனாளிகள், பெண்கள், முதியவர்கள் என அனைவரும் கடும் சிரமத்தோடு தண்ணீரைக் கடந்து கடைக்குள் செல்ல வேண்டிய நிலை உள்ளது. அதேபோல், அருகில் உள்ள சுகாதார நிலையம் முழுவது தண்ணீர் சூழ்ந்து காணப்படுவதால், பணியாளர்கள் மற்றும் இங்கு வரும் நோயாளிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

தற்போது நெல்லை மாவட்டத்தில் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. குழந்தைகள் தொடங்கி முதியவர் வரை அனைத்து தரப்பினரையும் காய்ச்சல் கடுமையாக வாட்டி வதைத்து வரும் சூழ்நிலையில், சுகாதாரத்தை பேணி காக்க வேண்டிய சுகாதார நிலையத்தையே மழைநீர் சூழ்ந்து காணப்படுவது, அப்பகுதி மக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

நோயை தீர்க்க வேண்டிய இடத்தில் நோயை உற்பத்தி செய்யும் வகையில் மழைநீர் சூழ்ந்து இருப்பதால், நோயாளிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, சுகாதார நிலையம் மற்றும் ரேசன் கடையை சூழ்ந்துள்ள தண்ணீரை அப்புறப்படுத்த வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.

இதையும் படிங்க: பரந்தூர் விமான நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்த அரசாணை பிறப்பிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.