ETV Bharat / state

நாங்குநேரி மாணவன் சின்னதுரைக்கு பிளாஸ்டிக் சர்ஜரி - சென்னை மருத்துவ குழு நெல்லையில் ஆய்வு!

author img

By

Published : Aug 14, 2023, 1:06 PM IST

சாதிய வன்மத்தால் தாக்கப்பட்ட நாங்குநேரி மாணவனுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்வது தொடர்பாக பரிசோதிக்க சென்னையிலிருந்து ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் நெல்லை வந்தனர்

plastic surgery for Nanguneri student Chinnadurai Chennai medical team Study in tirunelveli
சென்னை மருத்துவ குழு நெல்லையில் ஆய்வு

திருநெல்வேலி: நாங்குநேரி பெருந்தெருவை சேர்ந்தவர் அம்பிகாவதி, இவரது 17 வயது மகன் வள்ளியூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த ஒன்பதாம் தேதி இரவு, சக மாணவர்கள் மூன்று பேர் அம்பிகாவதியின் வீட்டுக்குள் புகுந்து அவரது மகனை கொடூரமாக வெட்டினர். அதனை தடுக்க சென்ற அம்பிகாவதியின் மகளுக்கும் வெட்டு விழுந்தது.

இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த அம்பிகாவதியின் மகன் மற்றும் மகள் இருவரும் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உயர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சாதிய வன்மத்தால் இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது விசாரணையில் தெரியவந்தது. பாதிக்கப்பட்ட மாணவனிடம் சக மாணவர்கள் சாதி பாகுபாடு காட்டிதாகவும் அதனால் பள்ளிக்கு செல்ல மனம் இல்லாத மாணவனின் தாயிடம் கூறியுள்ளார்.

மாணவரின் தாயார் பள்ளியில் புகார் அளித்த காரணத்தால் சக மாணவர்கள் அம்பிகாவதியின் மகனை சரமாரியாக வெட்டியதும் தெரியவந்தது. பன்னிரண்டாம் வகுப்பு மாணவரை உடன் படிக்கும் மாணவர்களே வீடு புடுந்து சரமாரியாக வெட்டிய இச்சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா நடிகர்கள் தொடர்ந்து தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

மேலும் அரசு சார்பில் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் நேரில் வந்து அம்பிகாவதி மற்றும் அவரது குழந்தைகளுக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். மாணவர்கள் வெட்டியதில் அம்பிகாவதியின் மகனின் கைகள், கால்கள், மார்பு உள்பட பல்வேறு இடங்களில் கடுமையான வெட்டு காயங்கள் ஏற்பட்டுள்ளது.

எனவே அவருக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் திட்டமிட்டு உள்ளனர். தற்போது அவர் மருத்துவமனையில் உள்ள ஏழாவது மாடியில் பிளாஸ்டிக் சர்ஜரி வார்டில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இந்த நிலையில் தமிழக அரசு உத்தரவின் படி மாணவனுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்வதற்காக சென்னையிலிருந்து ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிறப்பு மருத்துவர் குழுவினர் இன்று (ஆகஸ்ட் 14ஆம் தேதி) நெல்லைக்கு வருகை தந்தனர்.

தொடர்ந்து ஸ்டான்லி மருத்துவமனையைச் சார்ந்த தலைமை மருத்துவர் ஸ்ரீதேவி, மருத்துவர் மகேஷ், மருத்துவர் ஸ்ரீதர் ஆகியோர் கொண்ட குழுவினர் மாணவனுக்கு மருத்துவ பரிசோதனையை மேற்கொண்டு வருகின்றனர். பரிசோதனைக்கு பிறகு மாணவனுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி தேவைப்படுமா என்பது குறித்தும், தேவைப்பட்டால் எப்போது சர்ஜரி தொடங்க வேண்டும் என்பது குறித்தும் முடிவெடுக்க உள்ளனர்.

நேற்று மாணவனை சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு மாணவனுக்கு தேவையான அனைத்து உயர்தர சிகிச்சைகளையும் செய்து கொடுக்க முதலமைச்சர் உத்தரவிட்டிருப்பதாக தெரிவித்திருந்தார். அதன் பெயரில் இன்று சென்னையில் இருந்து சிறப்பு மருத்துவ குழுவினர் நெல்லைக்கு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நெல்லையில் தொடரும் பயங்கரம்: பஞ்சாயத்து உறுப்பினர் வெட்டி கொலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.